

இந்திய மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவுக்கும் மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத்துக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா 65 கிலோ எடைப் பிரிவில் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றிருக்கிறார். இவருக்கும் பிரபல இந்திய மல்யுத்த வீராங்கனையான சங்கீதா போகத்துக்கும் இடையே சோனிபட்டில் ஞாயிற்றுக்கிழமையன்று குடும்பத்தார்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
மேலும், இவர்களது திருமணம் 2020-ம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு நடைபெறும் என்று குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சங்கீதா போகத்தின் தந்தையும், துரோணாச்சாரி விருது பெற்றவருமான மகாவீர் சிங் கூறும்போது, “எனது இளைய மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. நாங்கள் அவர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். இரு தரப்புக் குடும்பமும் முன்பே நன்கு அறிமுகமானவர்கள். நான் எப்போதும் எனது மகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பேன்” என்றார்.
திருமணம் குறித்து பஜ்ரங் கூறும்போது, ”எங்களது திருமணம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு நடைபெறும். ஒலிம்பிக்கில் பதக்கம் பெற வேண்டும் என்பது என் தந்தையின் கனவு. எனவே எனது தந்தையின் கனவை நிறைவேற்றிய பிறகுதான் எனது திருமணம்” என்றார்.
விரைவில் திருமணம் புரியவுள்ள பஜ்ரங் புனியாவுக்கும், சங்கீதா போகத்துக்கும் மல்யுத்த வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.