

உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் தங்கம் வென்று மீண்டும் சாதித் தார்.
15-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஆடவர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டி உலக தட கள ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போட்டியில்ஜமைக்காவின் உசேன் போல்ட் பந்தய தூரத்தை 9.79 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
அவருக்கு மிக பலமான போட்டியாளராக கருதப்பட்ட அமெரிக்காவின் ஜஸ்டின் கேட்லின் 9.80 நொடிகளில் வந்து 2-வது இடம் பெற்றார்.
மற்றொரு அமெரிக்க வீரரான புரோமெல், கனடாவின் ஆந்ரே டி கிரேஸ் ஆகியோர் 9.92 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இந்தர்ஜீத் சிங் ஏமாற்றம்
ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் இந்தர்ஜீத் சிங் ஏமாற்றமளித்தார். அவர் 19.52 மீட்டர் வீசி 11-வது இடத்தையே பிடித்தார். இவர் முதல் வாய்ப்பில் 19.52 மீட்டர் வீசினார். 2-வது வாய்ப்பில் தவறு செய்தார். 3-வது வாய்ப்பிலும் சோபிக்காததால் பதக்க வாய்ப்பை இழந்தார். இப்போட்டியில் அமெரிக்காவின் ஜோ கோவாக்ஸ் 21.93 மீட்டர்கள் வீசி தங்கப்பதக்கம் வென்றார். ஜெர்மனியின் டேவிட் ஸ்ட்ரோல் வெள்ளிப்பதக்கமும், ஜமைக்காவின் ரிச்சர்ட்ஸ் வெண்கலமும் வென்றனர்.
ஆடவர் சங்கிலிக் குண்டு எறிதல் போட்டியில், போலந்தின் ஃபாஜ்டெக் 80.88 மீட்டர் வீசி, தங்கப்பதக்கம் வெனறார். தஜிகிஸ்தானின் நஸரோவ் வெள்ளியும், போலந்தின் நோவிக்கி வெண்கலமும் வென்றனர்.
ஆடவர் 20.கி.மீ நடைப் போட்டியில் ஸ்பெயினின் மைக்கேல் ஏஞ்சல் லோபல் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 19 நிமிடம் 14 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீனாவின் ஸென் வாங் 1:19:29 மணி நேரத்தில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். கனடாவின் பெஞ்சமின் துரோன் 1:19:57 மமி நேரத்தில் கடந்து வெண்கலம் வென்றார்.
இப்போட்டியில் இந்தியாவின் குர்மீத் 1:25:22 மணி நேரத்தில் கடந்து 35-வது இடமும், மற்றொரு இந்திய வீரர் சந்தன் சிஹ் 41-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.
இன்றைய பதக்க போட்டிகள்
ஆடவர் கம்பு ஊன்றித் தாண்டுதல், மகளிர் மும்முறை தாண்டுதல், மகளிர் 10,000 மீட்டர், மகளிர் 100 மீட்டர், ஆண்கள் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஆகிய இறுதிப்போட்டிகள் நடை பெறவுள்ளன.