Published : 15 Nov 2019 08:46 PM
Last Updated : 15 Nov 2019 08:46 PM
ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் 8 மாதகால தடையை அனுபவித்து வரும் மும்பை அதிரடி தொடக்க வீரர் பிரிதிவி ஷா-வின் தடைக்காலம் நவம்பர் 17 -ல் முடிகிறது, எனவே சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அவர் மும்பை அணிக்காக மீண்டும் களமிறங்குகிறார்.
கொஞ்சம் சேவாக், கொஞ்சம் சச்சின், கொஞ்சம் லாரா என்று வர்ணிக்கப்பட்ட பிரிதிவி ஷா, மே.இ.தீவுகளுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ரசிகர்களை மட்டுமல்லாது கிரிக்கெட் பண்டிதர்களையும் திகைப்பில் ஆழ்த்தினார்.
நவம்பர் 9ம் தேதி பிரிதிவி ஷாவுக்கு 20 வயது முடிந்தது. இதனையடுத்து தனது 2.0- வெற்றியை எதிர்நோக்குங்கள் என்று தன் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார் பிரிதிவி ஷா.
மே.இ.தீவுகளுக்கு எதிராக அபாரமாக ஆடி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா தொடரில் அவர் எப்படி ஆடுவார் என்று அனைவரும் பெருத்த ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த தருணத்தில் காயமடைந்து ஆட முடியாமல் போனது, அதிலிருந்தே கடினமான காலக்கட்டத்தைப் பிரிதிவி ஷா எதிர்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் 17 முதல் பிரிதிவி ஷா-வின் மட்டை சுழலுவதை ரசிகர்கள் காணலாம் என்பது மும்பை அணிக்கு மட்டுமல்ல இந்திய அணிக்கே பெரிய நற்செய்தியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT