Published : 14 Nov 2019 09:34 AM
Last Updated : 14 Nov 2019 09:34 AM

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஆப்கனுடன் இந்தியா இன்று மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்திய அணி தனதுகடைசி ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. பிபா உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றின் 2-வது கட்ட தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஓமனிடம் தோல்வியடைந்தது. இதையடுத்து ஆசிய சாம்பியனான கத்தாருக்கு எதிரான ஆட்டத்தை கோல்களின்றி டிரா செய்தது இந்திய அணி.

முதல் இரு ஆட்டத்திலும் இந்திய அணியின் செயல் திறன் சிறப்பாக இருந்தது. இதனால் 3-வதுசுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் கடந்த மாதம் 15-ம் தேதி கொல்கத்தாவில் வங்கதேச அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இதில் எளிதாக வெற்றி பெறும் எனகருதப்பட்ட நிலையில் ஆட்டத்தை போராடி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்து ஏமாற்றம் அளித்தது இந்திய அணி.

இந்த ஆட்டத்தில் 88-வது நிமிடத்தில் ஆதில் கான் தலையால் முட்டி கோல் அடித்திருந்தார். இந்த கோல்தான் ஆட்டத்தை டிராவில் முடிக்க பெரிதும் உதவியது. தகுதி சுற்றில் இ பிரிவில் உள்ள இந்திய அணி 3 ஆட்டங்களில் இரு டிரா, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. 5 அணிகள் உள்ள இந்த பிரிவில் 2-வது இடம் பிடித்தாலே 3-வது சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இதனால் இந்திய அணியின் அடுத்தக்கட்ட வாய்ப்பு என்பது ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது போன்றதுதான்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி தனது பிரிவில் கடைசிஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் தஜிகிஸ்தானில் உள்ளதுஷான்பே நகரில் இரவு 7மணிக்கு நடைபெறுகிறது இங்குஉறைபனி நிலவுவதால் ஆட்டம் செயற்கை புற்கள் தரையால் அமைக்கப்பட்ட ஆடுகளத்தில் நடைபெற உள்ளது. இது போன்றஆடுகளத்தில் இந்திய அணி இதற்கு முன்னர் விளையாடியதுஇல்லை. இதனால் உறை பனியும், செயற்கை ஆடுகளமும் இந்திய அணிக்கு சவால் அளிக்கக்கூடும்.

மேலும் இந்திய அணியின் சென்ட்ரல் டிபன்டரான அனாஸ் எடதோடிகா இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை. இந்த ஆட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய அணியினருடன் அனாஸ் எடதோடிகா புறப்பட்டு சென்ற நிலையில் அவரது தாயார் மரணமடைந்ததை தொடர்ந்து அவசரமாக தாயகம் திரும்பி உள்ளார்.

ஏற்கெனவே காயம் காரணமாக சென்ட்ரல் டிபன்டரான சந்தேஷ் ஜிங்கன், நடுகள வீரரான ராவ்லின்போர்ஜஸ் ஆகியோர் இல்லாமல்தான் இந்திய அணி விளையாடி வருகிறது. தற்போது அனாஸ் எடதோடிகாவும் விளையாட முடியாத சூழ்நிலை உருவாகிஉள்ளது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தரவரிசை பட்டியலில் 149-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் இந்திய அணி 106-வது இடம் வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி 3 ஆட்டங்களில் விளையாடி இரு தோல்வி, ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஓமனிடம் 0-3 என்ற கோல் கணக்கிலும், கத்தாரிடம் 0-6 என்ற கோல் கணக்கிலும் படுதோல்வியடைந்த நிலையில் கடைசி ஆட்டத்தி வங்கதேசத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஃபர்ஷாத் நூர் கோல் அடித்திருந்தார். சீனியர் வீரரான ஹாரூன் அமிரியும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரராக உள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு இந்தியன் சூப்பர் லீக்கில் (ஐஎஸ்எல்) கோவா அணிக்காக விளையாடியிருந்தார். மேலும் இந்த சீசனில் ஐ-லீக்கில் கோகுலம் கேரளா அணிக்காக விளையாட உள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக ஹாரூன் அமிரி இதுவரை 48 சர்வதேச போட்டிகளில் களமிறங்கியுள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 6-ல் வெற்றி கண்டிருந்தது. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. அதேவேளையில் ஒரு ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டிருந்தது. கடைசியாக 2013-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x