Published : 07 Aug 2015 09:41 AM
Last Updated : 07 Aug 2015 09:41 AM
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது. இதற்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அதற்கான கவுன்டவுன் அதிகாரப்பூர்வமாக ஒலிம்பிக் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்டது.
உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரேசிலில் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இதன் ஓராண்டு கவுன்டவுன் தொடக்க விழா கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றது.
பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃப், சுற்றுலாத் துறை அமைச்சர் ஹென்ரிக் எட்வர்டோ அல்வெஸ், விளையாட்டுத் துறை அமைச்சர் ஜார்ஜ் ஹில்டன், பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் கார்லஸ் நுஸ்மேன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பச் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக தயாராகி வரும் பிரம்மாண்ட ஒலிம்பிக் பூங்கா அருகே நின்றபடி ரியோ டி ஜெனிரோ மேயர் எட்வர்டோ பயஸ் கூறும்போது, “திட்டமிட்டபடி அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவு பெறும். இன்னும் 12 மாதங்களே உள்ள நிலையில், பணியை நிறைவு செய்வது சவாலான விஷயம். அது மாரத்தான் நிறைவு பெறுவதைப் போன்றது” எனத் தெரிவித்தார்.
ஒலிம்பிக் தீபம் உலகம் முழுவதும் சுமார் 12,000 பேரால் ஏந்திச் செல்லப்பட்டு, வரும் ஆகஸ்ட் 5, 2016-ல் ஒலிம்பிக் தொடக்கவிழா நடைபெறும் மரகானா மைதானத்தில் ஏற்றி வைக்கப்படும்.
ரியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கார்லஸ் நுஸ்மேன், போட்டி குறித்தி சில புள்ளி விவரங்களை வெளியிட்டார்.
இப்போட்டியில் மொத்தம் 206 நாடுகள் பங்கேற்கின்றன. தெற்கு சூடான் முதன்முறையாக பங்கேற் கிறது. 17 நாட்கள் நடைபெறும் 42 விளையாட்டுகளில் 10,500 வீரர்கள் பங்கேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பாராலிம் பிக் போட்டியில் 176 நாடுகளைச் சேர்ந்த 4,350 வீரர்கள் 23 விளை யாட்டுகளில் பங்கேற்கின்றனர்.
45,000 தன்னார்வலர்கள் இப்போட்டியில் பங்கேற்பவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுவர். ஒலிம்பிக் பூங்கா கட்டுமானப் பணிகள் 82 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. ஒலிம்பிக் கிராம கட்டுமானப் பணிகள் 89 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT