

புதுடெல்லி
டெல்லியில் இன்று வங்கதேசத்துக்கு எதிராக நடக்கும் முதலாவது டி20 போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் தோனியின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா வந்துள்ள வங்கதேசம் அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. முதலாவது டி20 ஆட்டம், டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று மாலை நடக்கிறது.
இந்தத் தொடரில் விராட் கோலி, தோனியின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முறியடித்துவிடுவார். இந்திய வீரர்களில் அதிக அளவு சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்றவர்களில் தோனி முதலிடத்தில் 98 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
ரோஹித் சர்மாவும் தோனிக்கு இணையாக 98 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்த ஆட்டத்தில் ரோஹித் சர்மா களமிறங்கும் போது தோனியின் சாதனையை முறியடித்து, உலக அளவில் அதிகமான டி20 போட்டிகளில் பங்கேற்ற 3-வது வீரர், இந்திய அளவில் முதல் வீரர் எனும் பெருமையை ரோஹித் பெறுவார். கடந்த 2007-ம் ஆண்டில் இருந்து ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
சர்வதேச அளவில் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷோகைப் மாலிக் 111 போட்டிகளில் பங்கேற்று முதலிடத்திலும் ஷாகித் அப்ரிடி 99 போட்டிகளில் பங்கேற்று 2-வது இடத்திலும் உள்ளனர். இந்தத் தொடர் முடியும் போது, அப்ரிடியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்து உலக அளவில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களில் 2-வது இடத்துக்கு முன்னேறிவிடுவார்
அதேபோல் டி20 போட்டிகளில் இந்திய வீரர்களில் அதிகமான ரன்களைக் குவித்தவர்களில் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே தொடர்ந்து போட்டி நிலவி வருகிறது. விராட் கோலி தற்போது 72 போட்டிகளில் விளையாடி 2,450 ரன்கள் குவித்துள்ளார். இதில் கோலி தனது சராசரியை 50 ஆகவும், 22 அரை சதங்களையும் அடித்துள்ளார்.
விராட் கோலியைக் காட்டிலும் 7 ரன்கள் குறைவாக 2,443 ரன்களுடன் ரோஹித் சர்மா உள்ளார். இந்தத் தொடருக்குள் விராட் கோலியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம். இன்று நடக்கும் போட்டியில் கூட ரோஹித் சர்மா கோலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா தனது சராசரியாக 32 ரன்கள் மட்டுமே வைத்துள்ளார்.
இதற்கு முன் ரோஹித் சர்மா கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை டி20 போட்டிக்குத் தலைமை ஏற்றுச் சென்று கோப்பையை வென்று கொடுத்தார். அந்தத் தொடரிலும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎன்எஸ்