Published : 23 Oct 2019 12:20 PM
Last Updated : 23 Oct 2019 12:20 PM
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
உலகின் செல்வாக்கு மிக்க கிரிக்கெட் அமைப்பான இந்திய அணியின் பிசிசிஐ கிரிக்கெட் அமைப்புக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி இன்று (புதன்கிழமை ) பதவி ஏற்றுக்கொண்டார். கங்குலி பிசிசிஐ-யின் 39-வது தலைவர் ஆவார்.
இதுகுறித்து பிசிசிஐ தன் ட்விட்டர் பக்கத்தில், “பிசிசிஐ தலைவராக கங்குலி முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்” என்று பதிவிட்டுள்ளது.
மேலும் பிசிசிஐ துணைத் தலைவராக உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மகிம் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி லோதா அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பிசிசிஐயில் உள்ள குறைகளைக் களைவதற்காக வினோத் ராய் தலைமையில் நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த நிர்வாகக் குழுவின் (சிஓஏ) 33 மாதங்கள் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.
வரும் 23-ம் தேதிக்குள் பிசிசிஐ அமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சிஓஏ தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தேர்வு கடந்த சில நாட்களாகத் தீவிரமாக நடந்தது. இதில் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பதவிக்காக, வேட்புமனுத் தாக்கல் செய்தார். கங்குலியைத் தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால் ஒருமனதாக பிசிசிஐ தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் மும்பையில் நடந்த பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT