Published : 21 Oct 2019 07:05 PM
Last Updated : 21 Oct 2019 07:05 PM

ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்.. மோசத்திலிருந்து படுமோச நிலைக்குத் தள்ளப்பட்ட தென் ஆப்பிரிக்கா

ராஞ்சி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்களின் ஆவேசமும் கேப்டன் விராட் கோலியின் ஓய்வு ஒழிச்சலில்லா அழுத்தம் கொடுத்தலும் தென் ஆப்பிரிக்க அணியை மிகப்பெரிய இன்னிங்ஸ் தோல்விக்கு இட்டுச் சென்றது.

ஆட்டம் சிறிது நேரம் நீட்டிக்கப்பட்டாலும் தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட் ஆகாமல் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 என்று சம்பிரதாயத்தை நாளைக்குத் தள்ளி வைத்தது. ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் ஒரே அணியில் விழுந்துள்ளது, காரணம் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் மோசத்திலிருந்து படுமோசம் என்ற நிலைக்குத் தாழ்ந்து விட்டனர். எந்த ஒருவரும் உத்தி ரீதியாக தன்னம்பிக்கையுடன் ஆடவில்லை. கவாஸ்கர் கூறுவது போல் நவீனகால பேட்ஸ்மென்களுக்கு பொறுமை என்பது ஷார்ட் சப்ளை.

உமேஷ் யாதவ் பந்தில் டீன் எல்கர் (16 ரிட்டையர்டு ஹர்ட்) காதருகே ஹெல்மெட்டில் அடி வாங்கியதால் கன்கஷன் இருக்கலாம் என்ற ஐயத்தில் அவருக்குப் பதிலாக புதிய விதிமுறைகளின் படி தியுனிஸ் டி புருய்ன் பதிலி வீரராக இறக்கப்பட்டு அவர் ஆட்ட முடிவில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்தும், ஆன்ரிச் நார்த்தியே 5 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

இன்று 9/2 என்று தொடங்கிய தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு மடிந்தது. அதிகபட்சமாக ஜுபைர் ஹம்சா 62 ரன்களையும் லிண்டே 37 ரன்களையும் எடுத்தனர். இந்தியத் தரப்பில் அஸ்வின் தவிர அனைவருக்கும் விக்கெட். ஷமி, நதீம், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இரண்டாவது இன்னிங்சில் ஷமி தனியாக மிளிர்ந்து 9 ஓவர் 5 மெய்டன் 10 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் மீண்டும் அபாரமாக வீசி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜடேஜா, அஸ்வின் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஸ்பின்னில் தடவுவது செய்தி கிடையாது, ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பவுன்சர்களில் அவர்கள் ஆச்சரியமடைந்தது, வேகத்தில் பீட்டன் ஆவது , ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீசினாலுமே தென் ஆப்பிரிக்க வீரர்களால் நிற்பதற்குரிய பொறுமை இல்லை, அந்த அணி பேட்ஸ்மென்களின் உத்திகளில் சீரியஸாக ஏதோ பிரச்சினை இருக்கிறது, காரணம் நேர் பந்துகளில் பவுல்டும் எல்.பியுமாகின்றனர். ரன்கள் ஓடுவதில் கூட பிரச்சினை. இந்த இந்திய அணி வித்தியாசமானது என்பதை அவர்கள் இன்னும் உணரவில்லை என்றே தெரிகிறது. வெளிநாடுகளில் வெல்கின்றனர், நியாயமான உண்மையான பிட்ச்களில் கூட இந்திய அணியினர் சவால் அளிக்கின்றனர் என்ற காலம் போய் எதிரணியினரை அவர்கள் மண்ணிலேயே ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு உயர்ந்து விட்டனர், அப்படியிருக்கும் போது இந்தியப் பிட்ச்களில் இன்னும் ஆக்ரோஷமாகவே செயல்படுவர், தென் ஆப்பிரிக்க அணி இந்தப் புதிய இந்திய அணியைச் சந்திக்க போதிய அளவில் தயாரிப்பு செய்து கொள்ளவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

இன்று காலை 9/2 என்று தொடங்கினர் ஜுபைர் ஹம்சாவும் கேப்டன் டுபிளெசியும். ஆனால் உமேஷ் யாதவ்வின் பந்து ஒன்று ஆஸ்திரேலியாவின் பெர்த் பிட்சில் கபில்தேவ் பந்து போலவும் ராஜர் பின்னியின் பந்து ஒன்று 140 கிமீ வேகத்தில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி அமைந்தது, ஆஃப் அண்ட் மிடிலில் பிட்ச் ஆகி சற்றே லேட் ஸ்விங் ஆக மட்டையைக் கடந்து பவுல்டு ஆனது, விளையாட முடியாத வகையறாவைச் சேர்ந்தது. வேகப்பந்து வீச்சாளர்களின் டிலைட் என்பார்களே அந்த வகைப் பந்தாகும் அது. 1 ரன்னில் வெளியேறினார்.

அதன் பிறகு ஜுபைர் ஹம்சாவும் (62) தெம்பா பவுமாவும் (32) சேர்ந்து ஸ்கோரை 107 ரன்களுக்குக் கொண்டு சென்றனர், இருவரும் சேர்ந்து 91 ரன்களை 22 ஒவர்களில் சேர்த்தனர். ஜுபைர் ஹம்சா பாசிட்டிவ் மனநிலையில் ஆடினார் அதனால்தான் 79 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று 78.48 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 62 ரன்கள் எடுத்தார். ஆனால் ஜடேஜாவின் வேகமான ஒரு பந்தை ஸ்டம்பிற்கு விட்டு பவுல்டு ஆகி வெளியேறினார். இதே ஸ்கோரில் தெம்பா பவுமாவும் தவறான பந்தை மேலேறி வந்து ஆட முயன்றார், நதீமின் இந்தப் பந்து நன்றாகத் திரும்ப பீட்டன் ஆகி சஹா மீதியைக் கவனித்துக் கொண்டார். 107/3 என்ற நிலையிலிருந்து 55 ரன்கலுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்த 55 ரன்களில் இடது கை பவுலர் லிண்டே 37 ரன்களை எடுத்தார். 56.2 ஒவர்களில் கதை முடிந்தது, அதாவது 28 ஓவர்களில் 7 விக்கெட்டுகளி இழந்து 162 ரன்களுக்குச் சுருண்டது.

மீண்டும் ஆடுமாறு கோலி, தென் ஆப்பிரிக்க அணியை பணித்தார்.

ஷமி ஆக்ரோஷத்தில் 2-வது இன்னிங்சிலும் தெ.ஆ. மோசம்: உமேஷ் பந்தில் ஹெல்மெட்டில் வாங்கிய டீன் எல்கர் ரிட்டையர்டு

பாலோ ஆனைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக் (5) , உமேஷ் யாதவ் வீசிய அவரது முதல் ஓவரில் ஆஃப் அண்ட் மிடிலில் வேகமாக வந்த பந்தை தவறான லைனில் ஆடி ஸ்டம்பைக் கோட்டை விட்டார். ஆஃப் ஸ்டம்ப் நடந்து சென்று சில அடிகள் தள்ளி போய் விழுந்தது. என்ன நடந்தது என்று புரியாமல் அவர் வெளியேறினார். உண்மையில் அது நேர் பந்து, தவறான லைனில் ஆடி கோட்டை விட்டார் டி காக்.

2-வதாக, ஜுபைர் ஹம்சாவுக்கு மொகமது ஷமி மிக அருமையாக பந்தை உள்ளே கொண்டு வர பந்து பிட்ச் ஆகி சற்றே நேர் ஆனது. ஒரு வேகமான லெக் கட்டர் பந்து போன்ற அது ஹம்சாவின் மட்டையைக் கடந்து பவுல்டு ஆனது, ஒருவிதத்தில் விளையாட சாத்தியமில்லாத பந்து என்பார்களே அந்த வகையறாவைச் சேர்ந்தது இது. ஹம்சா டக் அவுட்.

அடுத்ததாக கேப்டன் டுபிளெசி, முகமது ஷமியின் பந்து ஒன்று தாழ்வாக ஷுட் ஆக கால்காப்பில் வாங்கி எல்,பி.ஆனார், ரிவியூவும் பலிக்கவில்லை, ஒரு விதத்தில் பரிதாபமான அவுட். இவர் 4 ரன்கள்.

அடுத்ததாக தெம்பா பவுமாவின் மோசமான தொடர் என்பதை அறிவிக்குமாறு ஷமி வீசிய பந்தை எட்ஜ் செய்து சஹாவின் கேட்சுக்கு டக் அவுட் ஆனார் 22/4 என்று ஆனது. கடைசியில் தேநீர் இடைவேளைக்கு முன்பாக டீன் எல்கர், உமேஷ் யாதவ் பந்து ஒன்று 145 கிமீ வேகத்தில் தலைக்கு எகிற பந்து வந்த வேகத்தில் அவர் கண்களை அகற்ற வலது புறம் காதுக்கு மேல் ஹெல்மெட்டைத் தாக்கியது, அவர் தற்போது ரிட்டையர்டு ஆக டிபுருய்ன் அவருக்குப் பதிலாக களமிறங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x