Published : 19 Oct 2019 12:44 PM
Last Updated : 19 Oct 2019 12:44 PM

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தென் ஆப்பிரிக்க முன்னாள் பந்துவீச்சாளருக்கு 5 ஆண்டுகள் சிறை 

ஜோகன்ஸ்பர்க்,

இந்தியாவைப் பூர்வீமாகக் கொண்டவரும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் பந்துவீச்சாளருமான குலாம் போடி மீது 'ஸ்பாட் பிக்ஸிங்' குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2004-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஊழல் தடுப்பு சட்டத்தின்கீ்ழ் தண்டிக்கப்படும் முதல் கிரிக்கெட் வீரர் குலாம் போடி என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஹன்சி குரோனியே மேட்ச் பிக்ஸிங் ஊழலைத் தொடர்ந்து இந்த சட்டம் அங்கு கொண்டுவரப்பட்டு, அதில் முதன் முதலில் குலாம் போடி தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் குஜார் மாநிலம் சூரத் மாவட்டம் அருகே ஹதுரன் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் குலாம் போடி. நீண்டகாலத்துக்கு முன்பே அவரின் குடும்பத்தினர் தென் ஆப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்கள்.

தென் ஆப்பிரிக்க அணிக்காக இதுவரை இரு ஒருநாள் போட்டிகளிலும், ஒரு டி20 போட்டியிலும் குலாம் போடி பங்கேற்றுள்ளார். ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும் இடம் பெற்றுள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரும், பேட்ஸ்மேனுமான குலாம் போடி, உள்நாட்டு மற்றும் முதல் தரப்போட்டிகளில் அதிகமாக விளையாடியுள்ளார்.

187 முதல்தர ஒருநாள் போட்டிகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களும், 88 டி20 போட்டிகளில் 1887 ரன்களும் சேர்த்துள்ளார்.

40 வயதாகும் குலாம் போடி மீது ஸ்பாட் பிக்ஸிங் உள்ளிட்ட 8 வகையான ஊழல் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் குலாம் போடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சக வீரர்களை ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபடத் தூண்டியது, ஸ்பாட் பிக்ஸிங்ஸில் ஈடுபட்டது, ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குலாம் போடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர் மீதான வழக்கில் நடந்த விசாரணையில் கடந்த நவம்பர் மாதம் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்தது தண்டனை விவரங்களை மட்டும் அறிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில் பிரிட்டோரியா நீதிமன்றம் நேற்று தண்டனையை அறிவித்தது. இதில் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் குலாம் போடிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் 15 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வகையுண்டு, ஆனால், 5 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டது.

மேலும் ஸ்பாட் பிக்ஸிங் குற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருந்ததையடுத்து, 20 ஆண்டுகள் தடைவிதித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது

தற்போது ஜாமீன் பெற்றுள்ள குலாம் போடி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x