

ஹரியாணாவில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வட்டாப்பட்டியைச் சேர்ந்த துரைக்கண்ணு - கவிதா தம்பதியருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் பூவிதா. இவர், புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். ஹரியாணா மாநிலம் ரோதக்கில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் பெண்களுக்கான ஜூனியர் பிரிவில் பங்கேற்ற பூவிதா, வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி பூவிதா கூறியதாவது:முதல் வகுப்பில் இருந்தே அரசுப் பள்ளியிலேயே படித்து வருகிறேன். அப்போதிலிருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். 6-ம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்று சாதித்து வந்தேன். அதன்பிறகு, குத்துச்சண்டையில் பயிற்சி பெற்றேன்.
புதுக்கோட்டை மட்டுமின்றி வெளி மாவட்டங்களிலும் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளேன். கோட்ட அளவிலும், மாநில அளவிலும் நடைபெற்ற போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். தற்போது ஹரியாணாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று 3-ம் இடம்பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளேன். எதிர்காலத்தில் சர்வதேச அளவில் குத்துச்சண்டையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அதை அடைவதற்காக படிப்போடு, தினமும் மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
எனக்கு பயற்சி அளித்த பார்த்திபன் உள்ளிட்ட பயிற்சியாளர்கள், பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.