Published : 15 Oct 2019 04:13 PM
Last Updated : 15 Oct 2019 04:13 PM
கராச்சி, பிடிஐ
பாக். கிரிக்கெட் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் இப்போது பிரதமராகவும் இருப்பதால், பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாத அணிகள் மறுத்தால் அதற்கு பதிலடியாக வலுவான நிலைப்பாடு எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றிகரமாக ஒருநாள், டி20 தொடர்களை நடத்தியதையடுத்து யு.ஏ.இ.யில் நடத்துவதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறு பரிசீலனை செய்து வருகிறது.
டிசம்பரில் இலங்கை அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளை பாகிஸ்தான் நடத்தவுள்ள நிலையில் பாகிஸ்தானில் வந்து ஆடவில்லை எனில் தொடருக்கு ஆகும் செலவுகளை இலங்கையும் பகிர்ந்து கொள்ளுமா என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேள்வி எழுப்பி வருகிறது.
இலங்கை அணி பாகிஸ்தானில் ஆட மாட்டோம், ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் ஆடுவோம் என்று கூறினால் அதற்கான செலவுகளை ஏற்க வேண்டும் என்று ஐசிசி கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பு இலங்கை தரப்பிடம் தெரிவித்துள்ளது.
ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷமி சில்வா சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடருக்காக பாகிஸ்தான் சென்ற போது பாதுகாப்பு காரணங்களினால் வெளியில் எங்கும் சுதந்திரமாகச் செல்ல முடியாத நிலையைச் சுட்டிக்காட்டி, “விடுதி அறையிலேயெ 3 நாட்கள் அடைந்து கிடந்தோம்” என்றார். மேலும் இலங்கை வீரர்களிடம் கலந்தாலோசித்த பிறகே பாகிஸ்தான் வந்து ஆடுவது குறித்து முடிவு செய்ய முடியும் என்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT