Published : 14 Oct 2019 05:02 PM
Last Updated : 14 Oct 2019 05:02 PM
புதுடெல்லி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளராகத் தேர்வு செய்யப்பட உள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஓய்வுபெற்ற நீதிபதி லோதா அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பிசிசிஐயில் உள்ள குறைகளைக் களைவதற்காக வினோத் ராய் தலைமையில் நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த நிர்வாகக் குழுவின் (சிஓஏ) 33 மாதங்கள் பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. வரும் 23-ம் தேதிக்குள் பிசிசிஐ அமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சிஓஏ தெரிவித்துள்ளது.
இதையடுத்து அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் பொதுவேட்பாளராக சவுரவ் கங்குலி முன்னிறுத்தப்பட்டார். பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி இன்று மும்பையில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். கங்குலிக்கு எதிராக யாரும் நிறுத்தப்படாததையடுத்து போட்டியின்றித் தலைவராகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.
பிசிசிஐ அமைப்பின் தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டாலும் அவரால் ஓராண்டு மட்டுமே அந்தப் பதவியில் இருக்க முடியும். ஏனென்றால், பிசிசிஐ விதிமுறைபப்டி 6 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் நிர்வாகப் பதவி வகிக்க முடியாது. ஏற்கெனவே மேற்கு வங்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக 5 ஆண்டுகள் கங்குலி பணியாற்றிவிட்டார் என்பதால் இன்னும் ஓராண்டு மட்டுமே பிசிசிஐ நிர்வாகத் தலைவர் பதவியில் கங்குலியால் தொடர முடியும்.
இதற்கிடையே பிசிசிஐ அமைப்பின் செயலாளர் பதவிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும், பொருளாளர் பதவிக்கு நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோரதரர் அருண் துமாலும் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார். அவர் கூறுகையில், " காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் எனது தந்தை உள்துறை அமைச்சராக இருந்தபோது, நான் பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருந்திருந்தால், இந்த தேசியவாதிகளும், பக்தாஸ்களும் எப்படி எதிர்வினையாற்றி இருப்பார்கள்" #ஜஸ்ட் ஆஸ்கிங் எனத் தெரிவித்துள்ளார்.
, ஏஎன்ஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT