Published : 13 Oct 2019 05:47 PM
Last Updated : 13 Oct 2019 05:47 PM

தென் ஆப்பிரிகாவுக்கு எதிராக எந்த இந்திய கேப்டனும் செய்யாததைச் செய்த கோலி: 11 ஆண்டுகளுக்குப்பின் நடந்த சுவாரஸ்யம் 

புனே,

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக எந்த இந்தியக் கேப்டனும் இதுவரை செய்யாத விஷயத்தை கேப்டன் விராட் கோலி செய்து புதிய சாதனையைச் செய்துள்ளார்.

புனேயில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை ஒரு இன்னிங்ஸ் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது. கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது.

புனேயில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை எந்த இந்தியக் கேப்டனும் செய்யாத செயலை கோலி செய்துள்ளார். என்ன என்று கேட்கிறீர்களா...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை இந்திய அணி 50-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் ஒரு போட்டியில் கூட பாலோ-ஆன் கொடுத்து வென்றது இல்லை.

இந்தியக் கேப்டன்களான அசாருதீன், சச்சின், கங்குலி, டிராவிட், கும்ப்ளே, தோனி என எந்த கேப்டனும் பாலோ-ஆன் வழங்கி தென் ஆப்பிரிக்க அணியை வென்றதில்லை.

ஆனால் டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவுக்கு பாலோ-ஆன் வழங்கி , அதில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்ற முதல் இந்தியக் கேப்டன் விராட் கோலி மட்டும்தான் சாதனைக்கு சொந்தக்காரர்.

இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த 2008-ம் ஆண்டு லாட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் பாலோ-ஆன் பெற்று இருந்தது. அதன்பின் தென் ஆப்பிரிக்க அணி எந்த அணியிடமும் பாலோ-ஆன் பெறவில்லை. ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியிடம் பாலோ-ஆன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணி சொந்தமண்ணில் தொடர்ந்து 11-வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியஅணி 10 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்திருந்தது. அதை இந்திய அணி முறியடித்து உலக சாதனை படைத்துள்ளது

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x