

புனே,
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக எந்த இந்தியக் கேப்டனும் இதுவரை செய்யாத விஷயத்தை கேப்டன் விராட் கோலி செய்து புதிய சாதனையைச் செய்துள்ளார்.
புனேயில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை ஒரு இன்னிங்ஸ் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னணி வகிக்கிறது. கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் போட்டி வரும் 19-ம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது.
புனேயில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை எந்த இந்தியக் கேப்டனும் செய்யாத செயலை கோலி செய்துள்ளார். என்ன என்று கேட்கிறீர்களா...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை இந்திய அணி 50-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருந்தாலும் ஒரு போட்டியில் கூட பாலோ-ஆன் கொடுத்து வென்றது இல்லை.
இந்தியக் கேப்டன்களான அசாருதீன், சச்சின், கங்குலி, டிராவிட், கும்ப்ளே, தோனி என எந்த கேப்டனும் பாலோ-ஆன் வழங்கி தென் ஆப்பிரிக்க அணியை வென்றதில்லை.
ஆனால் டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவுக்கு பாலோ-ஆன் வழங்கி , அதில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்ற முதல் இந்தியக் கேப்டன் விராட் கோலி மட்டும்தான் சாதனைக்கு சொந்தக்காரர்.
இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த 2008-ம் ஆண்டு லாட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் பாலோ-ஆன் பெற்று இருந்தது. அதன்பின் தென் ஆப்பிரிக்க அணி எந்த அணியிடமும் பாலோ-ஆன் பெறவில்லை. ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியிடம் பாலோ-ஆன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணி சொந்தமண்ணில் தொடர்ந்து 11-வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலியஅணி 10 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்திருந்தது. அதை இந்திய அணி முறியடித்து உலக சாதனை படைத்துள்ளது
ஐஏஎன்எஸ்