Published : 10 Oct 2019 06:54 PM
Last Updated : 10 Oct 2019 06:54 PM

அடுத்த இலக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான்: பி.வி.சிந்து சூளுரை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனைச் சந்தித்த பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து : படம் எல் ஸ்ரீனிவாசன்

சென்னை

டோக்கியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க மனதும், உடலும் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருப்பது அவசியம், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதுதான் எனது அடுத்த லட்சியம் என்று பாட்மிண்டன் உலக சாம்பியன் பி.வி.சிந்து தெரிவித்தார்.

சென்னையில் தனியார் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பாட்மிண்டன் உலக சாம்பியன் பி.வி.சிந்து இன்று சென்னை வந்திருந்தார். அந்த நிகழ்ச்சி முடித்தபின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசனைச் சந்தித்து பேசினார். பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு மதிய விருந்து அளித்தார் கமல் ஹாசன்

2020-ம் ஆண்டில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ம் தேதி ஒலம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிச்சுற்றுப் போட்டியில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி தொடங்குகின்றன.

கடந்த ஆண்டில் உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, உலகத் தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் இருக்கும் வீரர், வீராங்கனைகள், இரட்டையர் பிரிவில் இருக்கும் ஜோடி ஆகியோர் குறைந்தபட்சம் 12 முதல் 15 போட்டித் தொடர்களில் விளையாடுவது கட்டாயம் அல்லது அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

இந்த விவகாரம் குறித்தும், ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாவது குறித்தும் நிருபர்கள் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதில் அளித்ததாவது:

இது ஒலிம்பிக் ஆண்டு, ஒவ்வொரு போட்டித் தொடரும் முக்கியமானது. ஆதலால், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கட்டுக்கோப்பாக ஒவ்வொரு போட்டிக்கும் 100 சதவீதம் வைத்திருப்பது அவசியம்.

காயமின்றி விளையாடுவதற்காக ஒவ்வொரு போட்டியையும் மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்வேன். ஒவ்வொரு போட்டியிலும் 100 சதவீதம் உடல்தகுதி அவசியம்.

எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி, என்னுடைய அடுத்த இலக்கு டோக்கியோவில் தங்கம் வெல்வதாகும். கோடிக்கணக்கான மக்களின் ஆசியை எதிர்நோக்குகிறேன்" எனத் தெரிவித்தார்

பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவைச் சந்தித்தது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கூறுகையில், " பாட்மிண்டன் வீராங்கனை சிந்துவுடனான எனது சந்திப்பு அரசியல் கலப்பற்றது. உலக சாம்பியன் பட்டம் வென்று தேசத்துக்கு சிந்து பெருமை சேர்த்துள்ளார். திறமைசாலியை, சாம்பியனை அங்கீகரிக்கவே பாராட்டு தெரிவித்தேன்"எனத் தெரிவித்தார்


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x