Published : 04 Oct 2019 07:16 PM
Last Updated : 04 Oct 2019 07:16 PM
விசாகப்பட்டிணம் டெஸ்ட் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்க அணியை கிட்டத்தட்ட தோல்வியிலிருந்து மீட்கப் போராடிய சுவர் டீன் எல்கர் 160 ரன்களை விளாசினார்.
டுபிளெசிஸுடன் இணைந்து 115 ரன்கள் பிறகு சதம் கண்ட டி காக்குடன் இணைந்து 164 ரன்கள் கூட்டணி அமைத்தார் டீன் எல்கர். இந்நிலையில் இன்று ஆட்டம் முடிந்தவுடன் ஒளிபரப்பாளர்களுக்கு அளித்த பேட்டியில் எல்கர் கூறியதாவது:
மீண்டும் பங்களிப்பு செய்ததில் மகிழ்ச்சி. இந்தியாவில் ஆடுவது மிகக்கடினம். கடந்த தொடரிலும் இங்கு இருந்தேன், நான் அவ்வளவு அனுபவசாலியாக இல்லை. இந்த 4 ஆண்டுகளில் ஒரு கிரிக்கெட் வீரராக முதிர்ச்சியடைந்துள்ளேன், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் எனக்கு பெரிதும் உதவியது.
கடந்த முறை இந்தியாவில் வந்து ஆடிய தொடரை ஏதாவது எடுத்துக் கொள்ள வேண்டுமென்றால் என்னத்தை எடுத்துக் கொள்வது, பிட்ச்கள் மோசமானவை.
இந்தியாவில் ஸ்பின்னர்களுக்கு எதிராக தடுப்பாட்டத்தை உறுதியாகப் பயன்படுத்த வேண்டும் அப்போதுதான் உங்களுக்கு அடித்து ஆடும் வாய்ப்பும் கிடைக்கும். சர்ரே அணியில் ஆடியது எனக்கு உதவியது.
ஸ்பின் ஆடுவது என்பது பற்றி நான் பிரக்ஞையுடன் இருந்தேன், பந்தை தூக்கி அடிப்பது என்பது நாம் எதில் வலுவாக உள்ளோம் என்பதைப் பொறுத்தது. என்னுடைய பலம் அது, இந்த டெஸ்ட் போட்டியில் இது பயனளித்தது அவ்வளவே.
குவிண்டன் டி காக் ஆடிய இன்னிங்ஸினால் மகிழ்ச்சியடைகிறேன், இப்படியாடுவதில் அவர் ஒரு ஜீனியஸ். அவர் இங்கு சதம் எடுத்தது ஆச்சரியமல்ல. டி காக்கின் ஒளிரும் எதிர்காலத்தின் தொடக்க சதமாக இது அமையலாம்.
இவ்வாறு கூறினார் டீன் எல்கர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT