Last Updated : 02 Oct, 2019 12:11 PM

 

Published : 02 Oct 2019 12:11 PM
Last Updated : 02 Oct 2019 12:11 PM

நிரூபித்தார் ரோஹித் சர்மா: இந்தியா நிதான ஆட்டம்

விசாகப்பட்டிணம்,

விசாகப்பட்டிணத்தில் நடந்துவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து தன்னை டெஸ்ட் போட்டிக்குத் தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார்.

ரோஹித் சர்மாவும், மயங்க் அகர்வாலுக்கும் சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என மாறி, மாறி வீசியும் இருவரையும் நகர்த்தமுடியாமல் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் திணறி வருகின்றனர். 20 ஓவர்களுக்கு மேல் இருவரும் விளாசலில் ஈடுபட்டதால் ஸ்கோர் வேகமெடுத்தது.

நண்பகல் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 30 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் சர்மா அபாரமாக ஆடி அரைசதம் அடித்து 52 ரன்களிலும், மயங்க் அகர்வால் 39 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. விசாகப்பட்டிணத்தில் இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ரோஹித் சர்மா, மயங்க் அக்ரவால் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டுமே ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கிய நிலையில், டெஸ்ட் பாரம்பரியத்துக்குச் சரி வருவாரா என்ற கேள்வி எழுந்தது.

கடந்த தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு பின் ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மே.இ.தீவுகள் தொடரிலும் ரோஹித் சர்மா ஓரம் கட்டப்பட்டார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டக் அவுட்டில் ரோஹித் ஆட்டமிழந்ததால், அவரின் பேட்டிங் மீது பெரும் சந்தேகம் எழுந்தது.

ஆனால் அனைத்து கணிப்புகளையும் உடைத்து எறியும் விதமாக ரோஹித் சர்மா தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக பேட் செய்தார், அவரின் ஷாட்களில் இருந்த நேர்த்தியும், நளினமும் அற்புதம். இவருக்கு துணையாக மயங்க் அகர்வாலும் பேட் செய்தார்.

பிலாண்டர் வீசிய முதல் ஓவரில் அகர்வாலும், ரபாடா வீசிய முதல் ஓவரில் ரோஹித் சர்மா பவுண்டரியும் அடித்து ரன் கணக்கை தொடங்கினார்கள்.

இருவரும் மோசமான பந்துகளை மட்டுமே தேர்வு செய்து பவுண்டரிக்கு அடித்து ரன்களைச் சேர்த்தனர். 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்களும், 19 ஓவர்களில் 50 ரன்களையும் இந்திய அணி அடைந்தது. ஆனால், 20 ஓவர்களுக்கு மேல் ஸ்கோர் வேகமெடுத்தது.

ரபாடா, பிலாண்டரின் வேகப்பந்துவீச்சு ரோஹித் சர்மா, அகர்வாலிடம் பலிக்கவில்லை. இதனால், சுழற்பந்து வீச்சாளர்கள கேசவ் மகராஜ், பீடெட், முத்துசாமி ஆகியோர் பந்துவீச வந்தனர். சுழற்பந்து வீச்சை எளிதாக ரோஹித் சர்மா சமாளித்தார்.

கேசவ் மகராஜ் வீசிய 20-வது ஓவரில் ஸ்ட்ரைட் ட்ரைவில் ஒரு சிக்ஸர் அடித்து ரோஹித் சர்மா மிரட்டி அணியின் ஸ்கோரை 50 ரன்களுக்கு உயர்த்தினார். அதன்பின் பீடெட் வீசிய 22-வது ஓவரில் அகர்வால் ஸ்ட்ரைட் ட்ரைவில் சிக்ஸர் விளாசினார். பீடெட் வீசிய 25-வது ஓவரில் ரோஹித் சர்மா லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாச சுழற்பந்து வீச்சாளர்கள் குழப்பமடைந்தனர்.

ரோஹித் சர்மாவும், அகர்வாலும் களத்தில் நங்கூரமிட்டு சுழற்பந்துவீச்சாளர்களை பதம் பார்க்கத் தொடங்கினார்கள். அதன்பின் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து ஸ்கோரை இருவரும் உயர்த்தினர். நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 84 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 2 சிக்ஸர்கள், 5பவுண்டரிகள் அடங்கும். துணையாக ஆடிய மயங்க் அகர்வால் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 39 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

போத்திராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x