

புதுடெல்லி,
காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்பிரிடிக்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் காட்டமான முறையில் அறிவுரை கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்புஅந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அரசியலமைப்பில் 370 பிரிவையும் திரும்பப்பெற்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரு பிரிவாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இது வரும் அக்டோபர் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவை கடுமையாக விமர்சித்து ஐ.நாவில் பேசினார். பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்களும் அவ்வப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி கூறிய கருத்துக்கு இந்திய அணி வீரர் தவண் பதிலடி கொடுத்துள்ளார்.
அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில், " இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் கவலைக்கிடமான சூழல் இருந்து வருகிறது. அப்பாவிகள் சுடப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள், சுதந்திரம், சுயநிர்ணய உரிமை குறித்து பேசும் குரல்கள் நசுக்கப்படுகின்றன. ஐ.நா. சபை எங்கே இருக்கிறது இதை ஏன் நிறுத்தவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு ஷிகர் தவண் பதிலடி கொடுத்து இந்தியில் ட்விட் செய்துள்ளார் அதில் " யாரேனும் எங்கள் நாட்டைப் பற்றிப்பேசினால், நாங்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நிற்போம். வெளியில் இருந்து யாரும் எங்களுக்கு அறிவுரை கூறத் தேவையில்லை. முதலில் உங்கள் நாட்டில் உள்ள பிரச்சினையை கவனித்து தீர்க்கப் பாருங்கள், அதன்பின் மற்ற நாடுகளின் பிரச்சினையில் தலையிடுங்கள். கண்ணாடி வீட்டுக்குள் இருப்பவர்கள், ஒருபோதும் கல்எறியக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்
இதேபோல ஏற்கனவே உலகக் கோப்பைப் போட்டியின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து அப்ரிடி கருத்துத் தெரிவித்திருந்தார். அப்போது அப்ரிடிக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவண், காஷ்மீர் விவகாரத்தில் வெளியாட்கள் யாரும் எங்களுக்கு அறிவுரை கூறத் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.