

பாகிஸ்தானில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது, இதுவே புதிய தலைமைப் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக்கிற்கும் முதல் போட்டித் தொடராகும்.
இந்நிலையில் முதல் போட்டியை முன்னிட்டு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மிஸ்பா உல் ஹக் பேட்டிங்கையும், அவரது பயிற்சியின் கீழ் என்ன மாதிரியான பேட்டிங் கவனம் பெறும் என்பதையும் குறிப்பிட்டு நிருபர் ஒருவர் கலாய்க்க அதற்கு மிஸ்பாவும் கலாய்ப்பாக பதில் அளித்தது செய்தியாளர்கள் சந்திப்பில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன.
நிருபர் கேட்டது, “பேட்ஸ்மென்கள் அடித்து ஆடுவதில் கவனம் செலுத்தாமல் டொக்கு டொக்கு என்று ஆடுகின்றனர், 235 பந்துகளில் சதம் அடிக்கின்றனர். நீங்கள் பேட் செய்யும் போது கூட அதிகம் லொட்டு வைப்பதில் தான் கவனம் செலுத்துவீர்கள், இப்போது பயிற்சியாளராக இருக்கும் நீங்கள் ‘டொக்கு டொக்கு’ அணுகுமுறையைத்தான் ஊக்குவிப்பீர்களா அல்லது அடித்து ஆடுவதை ஊக்குவிப்பீர்களா?” என்று கேட்க அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது.
இதற்கு மிஸ்பா பதில் அளிக்கையில், “நீங்கள் இன்று அதிகம் ‘டொக்கு டொக்கு’ மீது கவனம் செலுத்துகிறீர்கள், ஒருவேளை உங்களுக்கு இன்று கார் கிடைக்கவில்லையோ அதனால் பயிற்சியாளருக்கு எரிச்சல் மூட்டு என்று யாராவது உங்களிடம் கூறினார்களோ” என்று பதிலடி கொடுக்க மீண்டும் அரங்கத்தில் சிரிப்பலை மூண்டது.
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது.