Published : 23 Sep 2019 07:05 PM
Last Updated : 23 Sep 2019 07:05 PM

தென் ஆப்பிரிக்க பவுலர் தோளில் இடித்த விராட் கோலிக்கு தகுதியிழப்பு புள்ளியுடன் ஐசிசி எச்சரிக்கை

பெங்களூருவில் இந்திய அணி தோல்வியடைந்த போட்டியின் போது இந்திய கேப்டன் விராட் கோலி எதிரணி பவுலர் பியூரன் ஹென்றிக்ஸ் தோளில் இடித்ததாகப் புகார் எழுந்தது.

இதனையடுத்து ஐசிசி நடத்தை விதிமுறைகள் லெவல் 1-ஐ அவர் மீறியதான குற்றச்சாட்டில் ஒரு தகுதியிழப்பு புள்ளியைப் பெற்றதுடன் கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

இந்திய அணி பேட்டிங் ஆடிய போது, 5வது ஓவரில் விராட் கோலி ரன் எடுத்த போது பவுலர் பியுரன் ஹென்றிக்ஸுடன் தோள்பட்டை மோதலில் ஈடுபட்டார். இது குறித்து ஐசிசி ஆட்ட நடுவர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

“விராட் கோலி ஐசிசி வீரர்கள் ஒழுங்கு நடத்தை விதிகளை மீறினார். அதாவது முறையற்ற விதத்தில் எதிரணி வீரர் மீது அவர் மோதினார்” என்று ஐசிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2016-ம் தேதி திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ் விராட் கோலி முறையற்ற விதத்தில் 3ம் முறை நடந்து கொண்டுள்ளார்.

ஜனவரி 15, 2018-ல் தென் ஆப்பிரிக்காவில் ஒருமுறை, உலகக்கோப்பை 2019-ல் ஆப்கான் அணிக்கு எதிராக ஒருமுறை, தற்போது மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெங்களூரில் என்று மூன்று முறை ஒழுங்கு நடத்தையை மீறியதால் 3 தகுதியிழப்பு புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

கோலி மேலும் 14 மாதங்களுக்குள் அடுத்த நடத்தை வீதிமீறலில் ஈடுபட்டால், 4 புள்ளிகள் நீக்கத்துக்கான தகுதி புள்ளிகளாக மாறும் அப்போது அவர் ஓரிரு போட்டிகளுக்குத் தடை செய்ய வாய்ப்பு ஏற்படும்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x