Published : 23 Sep 2019 04:43 PM
Last Updated : 23 Sep 2019 04:43 PM

விக்கெட்டுகளை இழக்காமல் இருக்க பாதுகாப்பாக ஆடவேண்டாம், அடித்து ஆடவும்: ஆக்ரோஷமாக ஆட இந்திய வீரர்களுக்கு அறிவுறுத்தல்

பெங்களூரு டி20 போட்டியில் இலக்கை விரட்டாமல் முதலில் பேட் செய்ததும், நிதானிக்காமல் அடித்து ஆட முயன்றதும் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தோல்வி தழுவ தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை சமன் செய்தது.

விராட் கோலியும் ஆம் டாஸ் வென்று முதலில் பேட் செய்வதுதான் ‘புதிய அணுகுமுறை’, உலகக்கோப்பைக்கு முன்பாக பேட்டிங்கில் சிலபல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பெங்களூரு டி20 போட்டிக்குப் பிறகு தெரிவித்தார்.

இந்திய அணி பொதுவாக டி20, ஒருநாள் கிரிக்கெட் இரண்டிலும் பாரம்பரியமான அணுகுமுறையையே கொண்டிருந்தன, மற்ற அணிகளெல்லாம் காட்டடி வீரர்களைக் களமிறக்கி வெளுத்து வாங்கி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பழைய அணுகுமுறையில் மாற்றம் தேவை என்று உணரப்பட்டதற்குக் காரணம், நிறைய ஹிட்டர்களைக் கொண்ட அணிக்கு எதிராக இந்திய அணி திணறி வந்ததே.

அதனால்தான் இந்த தென் ஆப்பிரிக்க தொடரில் பேட்டிங் ஆதிக்க அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது, 7,8 மற்றும் 9ம் நிலைகளி இறங்க 3 ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர்களைத் தேர்வு செய்தது, காரணம், முன் வரிசை,நடுவரிசை வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளைப் பாதுகாக்க ஆடாமல் எதிரணி பவுலிங்கை அடித்து ஆட வேண்டும் என்பதற்காகவே. அந்தமாதிரியான அறிவுறுத்தலும் வீரர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதாக இந்திய அணி நிர்வாகத்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உண்மையில் டி20 போட்டிகளில் மற்ற சில அணிகளை ஒப்பிடும் போது இந்திய அணியின் ஆட்டம் பார்க்க மகா அறுவையாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் விக்கெட்டுகளை இழக்காமல் இருக்க பாதுகாப்பாக ஆட வேண்டாம், அடித்து நொறுக்கவும் என்ற அறிவுறுத்தல் முதல் போட்டியில் பயனளிக்காவிட்டாலும் போகப்போக இந்திய அணியை ஒரு ‘பவர் ஹவுஸ்’ ஆக மாற்றும் என்று எதிர்பார்க்கலாம்.

இத்தகைய சுதந்திரம்தான் ஷிகர் தவண் நேற்று வெளுத்து வாங்கக் காரணமாக அமைந்தது, விராட் கோலியும் ரபாடாவின் இன்ஸ்விங்கரை ‘ஹை பிளிக்’ ஷாட் ஆடினார் பந்து பவுண்டரிக்கு அருகே கேட்ச் ஆனாலும் கோலியிடமிருந்து இந்த ஷாட்டைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது, கோலி பொதுவாக காட்டடி அடிக்கக் கூடியவர் அல்ல, ரன்களை சேகரிப்பவர், ஆனால் அவரே ரபாடாவை ஒரே தூக்குத் தூக்கியது ஆச்சரியமாக இருந்தது, அத்தகைய ஷாட்களை துல்லியமாக ஆட்க்கூடியவர்கள் சேவாக் மற்றும் சச்சின் ஆகியோர்களாவர், கோலி அந்த மாதிரி ஆடியது டி20யில் இந்திய அணியின் புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஷம்சி வந்தவுடன் தவண் 2 சிக்சர்களை கவலைப்படாமல் விளாச பவர் ப்ளே முடிவில் இந்திய அணி வலுவான 54 ரன்கள் எடுத்தது. ஆகவே இந்தப் புதிய அணுகுமுறை ஓரளவுக்கு நேற்று வெற்றியடைந்துள்ளது. இன்னும் ரோஹித், கோலி, ரிஷப் பந்த், அய்யர், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் களம் புகுந்தால் பெரிய காட்டடி தர்பாரை இனி இந்திய டி20 பேட்டிங்கில் காண முடியும். எனினும் ஓரிரு தோல்விகளால் மீண்டும் பழைய நிலைமைக்கே திரும்பினாலும் திரும்பலாம், ஆனால் இப்போதைக்கு இந்த அணுகுமுறை வரவேற்கக் கூடியதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x