Published : 22 Sep 2019 04:54 PM
Last Updated : 22 Sep 2019 04:54 PM

இன்று மகள்கள் தினம்: உருக்கமான கவிதையால் நெகிழ வைத்த கவுதம் கம்பீர் 

கவுதம் கம்பீர் : கோப்புப்படம்

புதுடெல்லி

இன்று மகள்கள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி பாஜக எம்.பி.யும், முன்னாள் இந்திய அணி வீரருமான கவுதம் கம்பீர் தனது மகள்களுக்கு கவிதை எழுதி நெகிழ வைத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் மகள்கள் தினமாகவும், உலக அளவில் 28-ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இன்று மகள்கள் தினமாகும்.

இந்த ஆண்டு மட்டும் செப்டம்பர் மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள் வருகின்றன. அதனால் 4-வது ஞாயிற்றுக்கிழமையைக் கணக்கில் கொண்டு மகள்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

கவுதம் கம்பீர், மகள்கள் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரு மகள்களின் புகைப்படத்தையும் பதிவிட்டு, கவிதையைப் பதிவு செய்துள்ளார்.

கவுதம் கம்பீருக்கு நடாஷா ஜான் எனும் மனைவியும், ஆஜீன், அனைஜா என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். தனது இரு மகள்களுக்காக கம்பீர் எழுதிய கவிதை:

" உங்களின் நாட்கள் அனைத்தும்
இரவாக இருந்தால்
நீங்கள் என்னைத் தேடும்போது
நான் உங்களுடன் இருப்பேன்.
என் பெயரை மட்டும் உச்சரியுங்கள்
நான் உங்கள் இடம் தேடி வருவேன்
எல்லாம் உங்களுக்காக...


#டாட்டர்ஸ்டே" என்று கம்பீர் கவிதையை முடித்துள்ளார்.

முன்னதாக, டெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கவுதம் கம்பீர் இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசுகையில், " நான் கடந்த 2007-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் என்னைத் தேர்வு செய்யாதபோது, என் கிரிக்கெட் வாழ்க்கையில் அதுதான் மோசமானதாக இருந்தது.

நான் கிரிக்கெட் விளையாடுவதைக் கைவிட்டுவிட நினைத்தேன். அதற்குமுன் 14 வயது, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையிலும் நான் இடம் பெறவில்லை. 2007-ம் ஆண்டு நான் சிறப்பாக விளையாடிய போதிலும் என்னைத் தேர்வு செய்யாத போது வேதனையாக இருந்தது

ஆனால், 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நான் இடம் பெற்றேன். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் நான் டக் அவுட்டில் ஆட்டமிழந்தேன். என்னுடைய விதி இதுதானா என்று நினைக்கவில்லை. தொடர்ந்து முயன்றேன். அந்த உலகக் கோப்பையில் அதிகமான ரன் சேர்த்த வீரர்களில் நானும் ஒருவனாக வந்தேன். அந்த உலகக் கோப்பைப் போட்டியை மிகச்சிறப்பாக கைப்பற்றி வெற்றியுடன் முடித்தோம் " எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x