Published : 16 Jul 2015 09:41 AM
Last Updated : 16 Jul 2015 09:41 AM
3-வது மற்றும் கடைசி மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்தைத் தோற்கடித்தது இந்தியா. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரு போட்டிகளில் தோற்று தொடரை இழந்த இந்திய அணிக்கு நேற்றைய வெற்றி ஆறுதல் வெற்றியாக அமைந்தது.
பெங்களூரில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் சுஸீ பேட்ஸ் அதிகபட்சமாக 27 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார்.
அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் டிவைன் 18, பிராட்மூர் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீராங்கனைகள் பெரிய அளவில் ரன் சேர்க்காததால் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியத் தரப்பில் ராஜேஸ்வரி கெய்க்வாட் 3 விக்கெட்டுகளையும், இக்தா பிஸ்த், பூனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான மந்தனா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தபோதும், மற்றொரு தொடக்க வீராங்கனையான வனிதா 28 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டரில் வேதா கிருஷ்ணமூர்த்தி 34 (19 பந்துகள்), அனுஜா பாட்டில் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இந்தியா.
நியூஸிலாந்து தரப்பில் டிவைன், காஸ்பெரீக், பிராட்மூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT