Published : 20 Sep 2019 11:24 AM
Last Updated : 20 Sep 2019 11:24 AM

தோனியின் காலம் முடிந்துவிட்டது; சுனில் கவாஸ்கர் திட்டவட்டம்

எம்.எஸ்.தோனி, சுனில் கவாஸ்கர் : கோப்புப்படம்

புதுடெல்லி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக தோனியின் பேட்டிங் ஃபார்ம் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக ஆடிய அவரின் பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இடம் பெறாமல் தோனி தானாகவே விலகிக்கொண்டார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே நடந்துவரும் டி20 தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் தோனியின் காலம் இந்திய அணியில் முடிவுக்கு வருகிறதோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் தோனி குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசியதாவது:

''மகேந்திரசிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. இனிமேல் தோனிக்கு அடுத்த இடத்தில் யாரைக் கொண்டுவருவது குறித்து நாம் ஆலோசிக்க வேண்டும். என்னுடைய கருத்து அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ரிஷப் பந்தை தயார் செய்ய வேண்டும்.

ரிஷப் பந்த் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். அவருக்கே என்னுடைய முன்னுரிமை இருக்கும்.

அடுத்து நடக்கும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் கூட தோனியைத் தேர்வு செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து. அவருகுப் பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பளிக்கலாம்.

ஒருவேளை ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம். சஞ்சு சாம்ஸன் சிறந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன்.

2020-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணியை இளைஞர்கள்தான் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது என்னுடைய கருத்து. தோனி இந்திய அணிக்கு ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

ஆனால், இப்போது அவரை சற்று ஒதுக்கிவைத்து அடுத்த வீரரைத் தேர்வு் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. தோனியை வலுக்கட்டாயமாக அனுப்பாமல் , அவராகவே சென்றுவிடுவார் என்று நினைக்கிறேன்.

பேட்டிங் வரிசையில் ரிஷப் பந்த் 5 அல்லது 6-வது வரிசையில் களமிறங்குவது சரியானதாக இருக்கும் என நினைக்கிறேன். அவரின் பேட்டிங் இடம் எது என்பது அனைவருக்கும் விரைவில் தெரியவரும். டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரை இன்னும் நாம் பட்டை தீட்ட வேண்டும். அவரின் தவறுகளை நாம் அடிக்கடி சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக்கொள்வார்’’.

இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

உலகக்கோப்பை போட்டிக்குப் பின் அணியில் இடம் பெறாமல் தோனி இருக்கிறார். தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் தோனியை இந்திய அணி தேர்வுக்குழு தேர்வு செய்யவில்லை. இதனால் தோனி ஓய்வை அறிவிப்பாரா அல்லது அணியில் தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேசமயம் தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பராக கொண்டுவரப்பட்டுள்ள ரிஷப் பந்த் பேட்டிங்கில் பொறுப்பற்ற தனமாகச் செயல்படுவது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. பேட்டிங்கில் அவசரப்பட்டு ஷாட்களை ஆடுவதும், விரைவாக விக்கெட்டுகளை இழப்பதும் அணியின் பேட்டிங் வரிசையை ஸ்திரம் இழக்க வைக்கிறது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x