Published : 16 Sep 2019 08:16 PM
Last Updated : 16 Sep 2019 08:16 PM
ரிஷப் பந்த் ஆடும் ஷாட்கள் சில சமயங்களில் அணிக்கு பின்னடைவைக் கொடுத்து விடுகிறது என்று தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
டிரினினாட் ஒருநாள் போட்டியி முக்கியக் கட்டத்தில் விராட் கோலி எதிர்முனையில் இருக்கும் போது தேவையில்லாமல் இடது கை ஸ்பின்னர் பேபியன் ஆலன் வீசிய பந்துக்கு மேலேறி வந்து ஷாட் சரியாகச் சிக்காமல் மிட் ஆஃபில் கொடியேற்றி ஆட்டமிழந்தார். அதே போல் முன்னதாக லாடர்ஹில்லில் டி20 போட்டியில் சுனில் நரைனை முதல் பந்தே ஸ்லாக் ஸ்வீப் ஆடப்போய் ஆட்டமிழந்தார். ஆக 2 முறை முதல் பந்து டக் அவுட் ஆனார் பந்த்.
இதனைக் குறிப்பிட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய ரவி சாஸ்திரி, “முதல் பந்திலேயே அம்மாதிரியான ஷாட்டைப் பார்க்கும் போது ஏமாற்றமாக இருக்கிறது. இருமுறை அதே போல் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தனக்கு பின்னடைவைத் தேடிக்கொள்வதோடு அணியையும் கவிழ்த்து விடுகிறார். அப்போது கோலி இன்னொரு முனையில் இருக்கிறார் (22.3 ஓவர்களில் 164 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற நிலை). இலக்கை விரட்ட வேண்டிய நிலையில் கொஞ்சம் புத்தியுடன் ஷாட் தேர்வு அமைய வேண்டும் என்பதே முக்கியம்.
அவரது பேட்டிங் முறையை யாரும் மாற்றப் போவதில்லை, ஆனால் ஆட்டத்தின் சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த மாதிரி அவுட்டை அவர் தவிர்த்தால் அவரைப்போன்ற ஒரு அதிரடி சூரரைப் பார்க்க முடியாது. ஒரு ஆட்டமோ, 4 ஆட்டமோ அவர் கற்றுக் கொள்வார். தான் எவ்வளவு அபாயகரமான பேட்ஸ்மென் என்பதை அவர் உலகிற்குக் காட்ட வேண்டிய அவருக்குச் சரியான தருணம் இதுதான்” என்றார் ரவிசாஸ்திரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT