Published : 11 Sep 2019 06:00 PM
Last Updated : 11 Sep 2019 06:00 PM

இந்திய அணியின் தொடக்கக் கூட்டணி சராசரி 28.07: என்ன செய்யப் போகிறது இந்திய அணித் தேர்வுக்குழு?

அருமையான பார்மில் இருக்கும் அபிமன்யு ஈஸ்வரன்.

கடந்த 2016 முதல் இந்திய டெஸ்ட் அணி ஐசிசி தரவரிசையில் முதலிடம் வகித்து வருகிறது, என்றாலும் கடந்த 12 மாதங்களில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பல்லிளித்து வருகின்றனர்.

14 இன்னிங்ஸ்களில் கடந்த 12 மாதங்களில் இந்திய தொடக்கக் கூட்டணியின் சராசரி படுமோசமான 28.07 என்ற நிலையில்தான் உள்ளது. ஒருநாள் தொடர்களில் மிடில் ஆர்டர் சரிவு பெரிய பங்காற்றி வருகிறது, டெஸ்ட் தொடர்களில் தொடக்கக் கூட்டணி பல்லிளித்து வருகிறது. இதையெல்லாம் சரி செய்வதுதான் ஒரு கேட்பன், பயிற்சியாளரின் கடமை.

இதை விடுத்து வெற்றிகளைப் பற்றி எப்போதும் சுய-தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தால் எப்படி? இதில் ரவிசாஸ்திரி கூறுகிறார், 80களின் மே.இ.தீவுகள் போன்று, 2000-ம் ஆண்டு தருணங்களில் ஆஸ்திரேலியா போன்று இந்த இந்திய அணி ஒரு வழிமுறையை விட்டுச் செல்லும் என்று பிரயாசைப் படுகிறார். அந்த அணிகளில் அப்போது பலமான தொடக்க வீரர்கள் இருந்தனர். கிரீனிட்ஜ், ஹெய்ன்ஸ், இங்கு மார்க் டெய்லர், ஸ்லேட்டர், ஜஸ்டின் லாங்கர், மேத்யூ ஹெய்டன் என்று பட்டியலிட முடியும். இந்திய அணி கம்பீர்-சேவாக் ஜோடிக்குப் பிறகே தட்டுத் தடுமாறி வருகிறது என்பதுதான் உண்மை

இப்போதைக்குக் கோலியின் பேட்டிங்கும் இந்திய அணியின் பந்து வீச்சும்தான் சொல்லிக் கொள்ளும் படியாக உள்ளது. புஜாரா ஆஸ்திரேலியாவில் கலக்கினார், ஆனால் மே.இ.தீவுகளில் சொதப்பினார். ரஹானேவை உட்கார வைத்து உட்கார வைத்து அவர் பார்ம் மீண்டும் இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடக்க வீரர்கள் ஷிகர் தவண், ராகுல், மயங்க் அகர்வால் இதில் ஷிகர் தவணின் டெஸ்ட் வாழ்க்கை அவ்வளவுதான் என்று தெரிந்துவிட்ட நிலையில் காயம் காரணமாகவும் தற்போது ஊக்க மருந்து தடை காரணமாகவும் வெளியில் உள்ள பிரித்வி ஷா மட்டுமே 3 இன்னிங்ஸ்களில் 237 ரன்களை 118 என்ற சராசரியில் எடுத்திருகும் பிரகாசமான தொடக்க வீரராகத் தெரிகிறார்.

அக்டோபர் 2018 முதல் இந்திய தொடக்க வீரர்களின் ‘ஆட்டம்’:

ராகுல் 12 இன்னிங்ஸ்களில் 195 ரன்கள், சராசரி 17.72; அதிகபட்சம் 44 ரன்கள்

மயங்க் அகர்வால் 7 இன்னிங்ஸ்களில் 275 ரன்கள், சிறந்த ஸ்கோர் 77, சராசரி 39.28.

முரளி விஜய் 4 இன்னிங்ஸ் 49 ரன்கள், சராசரி 12.25.

ஹனுமா விஹாரி 2 இன்னிங்ஸ் 21 ரன்கள்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடரிலாவது இந்திய தொடக்க வீரர்களை நிரந்தரப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பிரிதிவி ஷா வரும் வரையில் என்றில்லாமல் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது கடைமையாகும்.

குஜராத் கேப்டன் பிரியங்க் பஞ்சல் மற்றும் பெங்கால் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோர் இந்திய அணிக் கதவை நீண்ட நாட்களாகத் தட்டி வருகின்றனர். அபிமன்யு ஈஸ்வரன் இந்தியா ஏ மற்றும் துலீப் ட்ராபி போட்டிகளில் பிரமாதமாக ஆடி வருகிறார்.

ரோஹித் சர்மாவை தொடக்க வீரராகக் களமிறக்கி சோதனை முயற்சி மேற்கொள்ளும் முடிவில் இருந்தால், ரோஹித் சர்மா முதலில் வெளியே செல்லும் பந்துகளுக்கான உத்தியைச் சரி செய்வதோடு உள்ளே வரும் பந்துகளில் எல்.பி., பவுல்டு ஆகாத உத்திகளை மேம்படுத்த வேண்டும், மேலும் ஸ்பின்னர்களிடம் அவர் சமீபமாக அதிகம் ஆட்டமிழந்து வருகிறார், அதையும் அவர் சரி செய்ய வேண்டிய நிலை உள்ளது

எனவே பிரியங்க் பஞ்சல் அல்லது அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோரில் ஒருவரை முதலில் முயற்சி செய்து பார்ப்பது சரியாக இருக்கும் என்றே கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அணித்தேர்வில் ராகுல் திராவிடின் கருத்தையும் கேட்டு அவரையும் உடன்பாட்டு மனோநிலையில் கலந்தாலோசிப்பது சரியாகவே அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x