ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு அயராத உழைப்பால் உதவிய மைதான ஊழியர்கள்

படம். | ஏ.எஃப்.பி.
படம். | ஏ.எஃப்.பி.
Updated on
1 min read

வங்கதேச சட்டோகிராமில் நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை அந்த சொந்த மண்ணில் 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வீழ்த்திய மிகச்சிறப்பான வெற்றியில் ஆப்கான் வெற்றிக்கு மைதான ஊழியர்களின் உழைப்பும் பெரும் பங்களித்தது.

5ம் நாளான இன்று வங்கதேச அணியை மழைதான் காப்பாற்ற முடியும் என்ற நிலையில் மழை ஏறக்குறைய வங்கதேசத்தைக் காப்பாற்றியிருக்கும். ஆனால் மைதான ஊழியர்களின் மைதானத்தின் மழை நீரை வடியச் செய்த அயராத பணியும் பெரும் பங்காற்றியது.மைதானத்தின் அபாரமான மழைநீர் வடிகால் வசதிகளும் உதவியது.

சஹுர் அகமெட் சவுத்ரி ஸ்டேடியத்தின் ஊழியர்கள் ஓய்வு ஒழிச்சலின்றி எப்படியாவது இந்த ஆட்டத்தில் முடிவு ஏற்பட வேண்டும் என்று பாடுபட்டு மழை நீர், ஈரம் ஆகியவற்றை அகற்றுவதில் பாடுபட்டனர்.

முதல் 3 மணி நேரம் முற்றிலும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பிறகு 1 மணியளவில் நடுவர்கள் வீரர்களை களத்துக்கு அழைக்க ஆட்டம் தொடங்கியது, ஆனால் 7 நிமிடங்களில் மழை மீண்டும் கொட்டத் தொடங்கியது. இந்த மழை நிற்க 2 மணி நேரம் ஆனது.

அதன் பிறகு மைதான ஊழியர்கள் கடுமையாக பாடுபட்டு விளையாடும் அளவுக்கு மைதானத்தை தேற்ற 4.20 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. ஆனாலும் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.

18.4 ஓவர்கள்தான் நடக்கும் என நடுவர்கள் தெரிவிக்க ஆட்டம் தொடங்கியது ரஷீத் 4 விக்கெட்டுகளில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற 3.2 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வங்கதேசம் சுருண்டது. மறக்க முடியாத இந்த ஆப்கன் வெற்றியில் மைதான ஊழியர்களின் பங்கையும் மறக்க முடியாது என்கின்றன வங்கதேச ஊடகங்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in