Published : 09 Sep 2019 03:42 PM
Last Updated : 09 Sep 2019 03:42 PM
தோனியைச் சுற்றிப் பின்னப்படும் மர்மவலையும் முடிச்சும் அவிழ்க்கப்பட முடியாத நிலையில் டி20 உலகக்கோப்பையில் அவர் ஆடுகிறார் என்றால் இப்போது ஒவ்வொரு போட்டியிலும் அவர் ஆடுவதுதான் முறை என்று முன்னாள் இந்திய கேப்டன், பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
ஏதோ இந்திய டி20 அணியை உறுதி செய்வதற்காக தோனி அவகாசம் அளித்ததாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்க, கிரிக்கெட் வட்டாரங்களில் சலசலப்பு எழுந்தது. ஒன்று இவர் ஆடுகிறேன், அல்லது ஓய்வு பெறுகிறேன் என்பதை அறிவிக்க வேண்டும், அதை விடுத்து அணிக்கு அவகாசம் கொடுக்கிறார் என்று கூறுவதெல்லாம் எங்ஙணம் என்ற கேள்விகள் எழுந்தன.
இந்நிலையில் அனில் கும்ப்ளே, கிரிக்கெட் நெக்ஸ்ட் நேர்காணலில் கூறும்போது, “உலகக்கோப்பை டி20யில் எந்த மாதிரியான அணி விளையாட வேண்டும் என்பதை விரைவில் முடிவு செய்ய வேண்டும். தொடர் முழுதும் சீரான முறையில் ஆடும் அணி வேண்டும். இதுதான் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் நடக்கவில்லை.
டி20 உலகக்கோப்பை அணியில் தோனி விளையாட வேண்டும் என்று தேர்வுக்குழுவினர் விரும்பினால் தோனி அதற்கு முன்பாக ஒவ்வொரு போட்டியிலும் ஆடுவதுதான் முறை. அப்படி ஆடவில்லையெனில் அவரிடம் உட்கார்ந்து விவாதிக்க வேண்டும். அது எப்படி நிகழ வேண்டும் என்பதை அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். அடுத்த 2 மாதங்களில் இதை அவர்கள் செய்தாக வேண்டும்.
பந்த் ஆட்டத்திலும் சீரற்ற தன்மை இருக்கும் போது, தோனி பற்றிய முடிவை தேர்வுக்குழுவினர் திட்டவட்டமாக எடுக்க வேண்டும். தேர்வுக்குழுவின நிச்சயம் உறுதியான ஒரு முடிவுக்கு வருவது நல்லது” என்றார் அனில் கும்ப்ளே.
கிரிக்கெட் ஆட்டத்தை விட தனிநபர் பெரிய முக்கியமல்ல என்பதை பிசிசிஐ தோனி விஷயத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT