Last Updated : 05 Sep, 2019 01:59 PM

 

Published : 05 Sep 2019 01:59 PM
Last Updated : 05 Sep 2019 01:59 PM

ஸ்டெம்பில் பெயில்ஸ்' இல்லாமல் நடந்த ஆஷஸ் கிரிக்கெட்: 4-வது டெஸ்டில் ஸ்மித் அரைசதத்தால் ஆஸி நிதானம்

மான்செஸ்டர்,

கிரிக்கெட்டில் இதுபோல் நடப்பது அரிதினும் அரிதுதான் ஆனாலும் இது நேற்று நடந்துள்ளது.

மான்செஸ்டரில் நேற்று நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியின் முதல்நாள் ஆட்டம் 'ஸ்டெம்ப்பில் பெயில்ஸ்' இல்லாமல் நடந்துள்ளது. இது கிரிக்கெட்டில் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுதான் என்றாலும் கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டுத்தான் நடந்துள்ளது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்துள்ளது. ஸ்மித் அரைசதம் அடித்து 60 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 18 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில் இதுவரை இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் உள்ளன, ஒரு போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் 4-வது போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம்ப் பெய்ன் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

5-வது முறையாக வார்னர்...

வார்னர், ஹேரிஸ் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டூவர்ட் பிராட் வீசிய முதல் ஓவரில் ஆப்-சைடு விலகிச் சென்ற பந்தை வார்னர் தொட்டதால் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். ஆஷஸ் தொடரில் 5-வது முறையாக பிராட் பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்துள்ளார். வார்னரை கிண்டல் செய்யும் விதமாக ஐசிசியும் கருத்துக்களை பதிவிட்டது.

அடுத்து மார்னஸ் லாபுசாக்னே களமிறங்கி, ஹேரிஸுடன் சேர்ந்தார். ஆடுகளத்தில் புற்கள் இருந்ததாலும், காற்றின் வேகம், குளிர்ந்த காற்று ஆகியவற்றால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதனால், இங்கிலாந்து பந்துவீச்சை சமாளித்து ஆடுவதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சிரமப்பட்டார்கள்.

13 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேரிஸ் கால்காப்பில் வாங்கி பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 7-வது ஓவரில் 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது.

3-வது விக்கெட்டுக்கு வந்த ஸ்மித், லாபுசாக்னேயுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடத் தொடங்கினார்கள். நேரம் செல்லச் செல்ல இருவரும் தங்களின் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பினர்.

4-வது அரைசதம்

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களி்ன் பந்துவீச்சை லாவகமாகக் கையாண்ட லாபுசாக்னே அருமையான ஷாட்கள் மூலம் சில பவுண்டரிகளை அடித்தார். 88 பந்துகளில் அரைசதம் அடித்தார் லாபுசாக்னே. ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 4-வது முறையாக அரைசதத்தை அவர் பதிவு செய்தார்.

கடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பந்துவீச்சில் காயம் அடைந்த ஸ்மித் இந்த முறை ஆர்ச்சர் பந்துவீச்சை எளிதாகக் கையாண்டு சில பவுண்டரிகளை அடித்தார். ஸ்மித் 81 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார்

இருவரும் களத்தில் நங்கூரம் பாய்ச்சி விளையாடியதால் இவர்களைப் பிரிக்க இங்கிலாந்து வீரர்கள் சிரமப்பட்டார்கள். 32 ஓவர்களுக்குப்பின் மைதானத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், ஸ்டெம்பில் வைக்கப்பட்டு இருந்த பெய்ல்ஸ் காற்றில் அடிக்கடி பறந்து சென்றது.

பெயில்ஸ் நீக்கம்

இதனால் பந்துவீச்சாளரும், பேட்ஸ்மேனும் சிரமத்துக்குள்ளாகி விளையாட்டில் தடை ஏற்பட்டது. இதையடுத்து, கள நடுவர்கள் தர்மசேனா, எராஸ்மஸ் இருவரும் ஆலோசித்து பெய்ல்ஸை நீக்கிவிட்டு ஆட்டத்தை தொடர முடிவு செய்தார்.

கிரிக்கெட்விதிகளுக்கு உட்பட்டுத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இங்கிலாந்து வீரர்களுக்கு நடுவர்கள் விளக்கம் அளித்தனர். கடந்த 2017-ம் ஆண்டு மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான் இடையிலான சர்வதேச போட்டியில் இதுபோன்று பெய்ல்ஸ் இல்லாமல் போட்டி நடத்தப்பட்டது என்பதை தெரிவித்து ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஆனால் இதற்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிருப்தியுடன்சென்றனர். இங்கிலாந்து வீரர் ஓவர்டர்ன் வீசிய பந்துவீச்சில் 67 ரன்களில் லாபுசாக்னே போல்டாகி ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ஸ்மித், லாபுசாக்னே கூட்டணி 116 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு வந்த ஹெட், ஸ்மித்துடன் ஆடி வந்தார். 44 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் திடீரென மழை வரவே ஆட்டம் நிறுத்தப்பட்டது.

போத்தி ராஜ்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x