Last Updated : 29 Aug, 2019 05:41 PM

 

Published : 29 Aug 2019 05:41 PM
Last Updated : 29 Aug 2019 05:41 PM

கவலையளிக்கும் ரிஷப் பந்த் ஃபார்ம்: அஸ்வின், ரோஹித், சஹாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? நாளை இந்தியா-மே.இ.தீவுகள் 2-வது டெஸ்ட் தொடக்கம்

கிங்ஸ்டன்,

கிங்ஸ்டனில் நாளை தொடங்கும் மேற்கிந்தியத்தீவுகள் எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை வென்று டெஸ்ட் தொடரை க்ளீன் ஸ்வீப் செய்யும் முனைப்புடன் இந்தியஅணி களமிறங்குகிறது.

ஆனால், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தின் மோசமான பேட்டிங் ஃபார்ம் தொடர்ந்து கவலையளிக்கிறது. அதேசமயம் வாய்ப்புக்காக விருதிமான் சாஹாவும், ரோஹித் சர்மாவும் காத்திருக்கிறார்கள். நாளை இருவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது கடைசிநேரத்தில்தான் தெரியும்.

ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமான வெற்றி பெற்றது. அந்த வெற்றிக் கூட்டணியை பெரும்பாலும் மாற்றுவதற்கு கேப்டன் கோலி விரும்பமாட்டார். இருந்தாலும், ரிஷப்பந்த் ஃபார்ம் கருத்தில் கொண்டு சஹாவுக்கு வாய்ப்பு வழங்கக்கூடும்.

அதேபோல, மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் இருவரில் ஒருவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவை களமிறக்குவதுகுறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானேயின் அபாரமான சதம், இசாந்த் சர்மா, ஜஸ்புரித் பும்ராவின் சிறப்பான பந்துவீச்சு ஆகியோவை வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.கிங்ஸ்டன் சபினா பார்க் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் நன்றாக ஒத்துழைக்கும் மைதானம் என்பதால் போட்டி ஒருதரப்பாக முடிவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

இந்திய அணியின் பந்துவீச்சுப்பயிற்சியாளர் பரத் அருண் ஆடுகளம் குறித்துக் கூறுகையில், " ஆடுகளம் சிறப்பாக இருக்கிறது, காலநிலையும் வீரர்களுக்கு ஏற்றார்போல் இருக்கிறது. நிச்சயம் 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய வீரர்கள் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் ஜொலிப்பார்கள்" என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய அணியைப் பொறுத்தவரை விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தை டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 போட்டிகளுக்கும் அவரை பயன்படுத்த அணி நிர்வாகம் ஆர்வமாக இருக்கிறது. ஆனால், மேற்கிந்தியத்தீவுகள் வந்ததில் இருந்து ரிஷப் பந்த் ஒருபோட்டியைத் தவிர அனைத்து போட்டிகளிலும் மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார்.

டி20 போட்டியில் 0,4,65 ரன்களும், ஒருநாள் ஆட்டத்தில் 0, 24, 7 ஆகிய ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்போட்டியிலும் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை.

ஆதலால், நாளை தொடங்கும் ஆட்டத்தில் ரிஷப் பந்த்துக்கு பதிலாக வாய்ப்புக்காக காத்திருக்கும் விருதிமான் சாஹாவுக்கு ஏன் வாய்ப்பு வழங்கக்கூடாது என்ற கோணக்கில் அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

அதேபோல தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வாலும் எதிர்பார்த்த அளவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவில் தனது திறமையை நிரூபித்த அகல்வால் இங்கு தடுமாறுகிறார். இவரின் இடத்தைப் பிடிக்க ரோஹித் சர்மா வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
நடுவரிசையில் விராட் கோலி, ரஹானே கூட்டணி வலிமையாகத் திகழ்கிறது. ரஹானே சதம் அடித்து சூப்பர் ஃபார்மில் இருக்கிறார். அதேபோல ஹனுமா விஹாரியும் 2-வது இன்னிங்ஸில் 93 ரன்கள் சேர்த்து தனது தேர்வை நியாயப்படுத்தியுள்ளார்.

இது தவிர்த்து ஆல்ரவுண்டர் ஜடேஜா முதல் இன்னிங்ஸில் அடித்த அரைசதம் போற்றக்கூடியது. அணியை இக்கட்டான கட்டத்தில் இருந்து மீட்டெடுத்து அரைசதம் அடித்த ஜடேஜாவின் ஆட்டம் சிறப்பாகும். ஆதலால், அவரின் இடமும் நாளை உறுதியாக இருக்கும். அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்தான்.

மற்றவகையில் கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு அளிப்பதுகுறித்து ஆலோசிக்கப்படலாம்.

பந்துவீச்சில் முகமது ஷமி, பும்ரா, இசாந்த் சர்மா கூட்டணி மிரட்டும்வகையில் இருப்பதால் உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.

மேற்கிந்தியத்தீவுகள் அணியைப் பொறுத்தவரை முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேன்கள் கூட அரைசதம் அடிக்கவில்லை. 2-வது இன்னிங்ஸில், 3 பேட்ஸ்மேன்களைத் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஹெட்மயர், ஷாய் ஹோப், கேம்பெல், டேரன் பிராவோ ஆகியோரின் பேட்டிங் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x