Published : 27 Aug 2019 05:03 PM
Last Updated : 27 Aug 2019 05:03 PM

டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானம்: அருண் ஜேட்லி பெயர் சூட்டப்படுகிறது

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் அரங்கின் பெயரை மாற்றி மறைந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி பெயர் சூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ துணைத் தலைவராகவும், டெல்லி கிரிக்கெட் அமைப்பின் தலைவராகவும் அருண் ஜேட்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் டெல்லி அரங்கின் பெயர் மாற்றமும், அரங்கில் ரசிகர்கள் அமரும் கேலரி ஒன்றுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெயரும் சூட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி கிரிக்கெட் சங்கம் மற்றும் மாவட்ட அமைப்பு ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், " டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா கிரிக்கெட் அரங்கு பெயர்மாற்றம் செய்யப்பட்டு, அருண் ஜேட்லி அரங்கு என சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 12-ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் அரங்கின் பெயர் அதிகாரபூர்வமாக மாற்றி அருண் ஜேட்லி அரங்கு என பெயர் சூட்டப்படும். அந்த நிகழ்ச்சியின்போது, அரங்கில் உள்ள ஒரு ஸ்டான்டுக்கு விராட் கோலியின் பெயர் சூட்டப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ராஜத் சர்மா கூறுகையில், " அருண் ஜேட்லியின் ஆதரவு, ஊக்கம் ஆகியவற்றால் விராட் கோலி, வீரேந்திர சேவாக், கம்பீர், ஆஷிஸ் நெஹ்ரா, ரிஷப் பந்த் ஆகிய வீரர்கள் வந்தார்கள். பல வீரர்கள் நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக டெல்லி ஆளுநர் அனில் பைஜலுக்கு பாஜக எம்.பி. கம்பீர் எழுதிய கடிதத்தில், யமுனா ஸ்போர்ட்ஸ் காம்பளக்ஸ் எனும் பெயரை மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் பெயரை சூட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x