Published : 24 Aug 2019 04:29 PM
Last Updated : 24 Aug 2019 04:29 PM

ஓய்விலிருந்து கிரிக்கெட்டுக்குத் திரும்ப அம்பதி ராயுடு முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு திரும்புகிறார்?

உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாததால் கடும் விரக்தியில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்த அம்பதி ராயுடு, மீண்டும் கிரிக்கெட் ஆடும் எண்ணத்தில் ஓய்வைக் கைவிடுவதாக அறிவித்துள்ளர்.

மேலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஐபிஎல் போட்டிகளில் ஆடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் இது தொடர்பாகக் கூறும்போது,

“நான் நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் ஆடுவேன். மீண்டும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்குத் திரும்புகிறேன். என்னுடைய தற்போதைய முன்னுரிமை உடல்தகுதியை மேம்படுத்துவதே.

ஓய்வு பெற்றது உணர்ச்சிவயப்பட்ட முடிவு என்று நான் கூற மாட்டேன். உலகக்கோப்பைக்காக 4 ஆண்டுகள் கடுமையாக உழைத்தேன். ஆகவே அணியில் இடம் கிடைக்கவில்லையெனில் நிச்சயம் ஏமாற்றமடைவது இயற்கைதான். அதனால் ஓய்வு அறிவிப்பது முறை என்று உணர்ந்தேன். என்னை புறக்கணித்ததற்காக நான் இந்த முடிவை எடுக்கவில்லை.

ஒரு விஷயத்துக்காக கடுமையாக உழைக்கிறோம் ஆனால் அது நடக்கவில்லை எனும்போது நகர்ந்து விட வேண்டியது என்றுதான் ஓய்வு அறிவித்தேன்.

அதன் பிறகு சிந்தித்துப் பார்த்தேன். பிறகு மீண்டும் வந்து கிரிக்கெட் ஆட்டத்தை தொடர்வோம் என்று முடிவெடுத்தேன்” என்றார்.

உலகக்கோப்பை அணியில் விஜய் சங்கர் இடம்பிடித்தார், அவரை 3டி வீரர் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவிக்க, இவர் ட்விட்டரில் உடனே அதனை கலாய்க்குமாறு ‘உலகக்கோப்பையை தொலைக்காட்சியில் பார்க்க 3டி கண்ணாடிக்கு ஆர்டர் செய்துள்ளேன்’ என்றார். ஆனால் இவர் கலாய்ப்பை பிசிசிஐ சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x