Published : 16 Aug 2019 07:04 PM
Last Updated : 16 Aug 2019 07:04 PM

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமனம்

கேப்டன் விராட் கோலியின் ஐயம்திரிபற்ற ஆதரவு பெற்றுள்ள ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கபில்தேவ் தலைமை கிரிக்கெட் ஆலோச்னைக் குழு இந்த முடிவை அறிவித்துள்ளது.

ரவிசாஸ்திரி 2021-ல் இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை வரை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2007-ல் வங்கதேச தொடரின் போது கிரிக்கெட் மேனேஜராக இந்திய அணியுடன் இணைந்த ரவி சாஸ்திரி பிறகு அணி இயக்குநராக 2014-16 காலக்கட்ட்த்தில் விராட் கோலியுடன் இணைந்து பணியாற்றினார் பிறகு தலைமைப் பயிற்சியாளராக 2017-2019 வரை பணியாற்றி வந்த நிலையில் அணி இவரது பயிற்சியின் கீழும் கோலியின் கேப்டன்சியின் கீழும் பல வெற்றிகளை மூன்று வடிவங்களிலும் குவித்து வருவதால் இதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று மீண்டும் நியமிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

கபில்தேவ், கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகிய சிஏசி உறுப்பினர்கள் ரவி சாஸ்திரியை மீண்டும் நியமிக்க ஏகமனதாக ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத், நியூசிலாந்தின் மைக் ஹெசன், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர், பில் சிம்மன்ஸ் போட்டியிலிருந்து விலகியதையடுத்து இவர்களை பின்னுக்குத் தள்ளி ரவிசாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“நம்பர் 3 டாம் மூடி, நம்பர் 2 மைக் ஹெசன், நம்பர் 1 ரவிசாஸ்திரி, நீங்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்படுகிறார், ஆனால் இது மிகவும் நெருக்கமான போட்டி” என்றார் கபில்தேவ்.

நேர்காணல் கண்ட அனைத்து பயிற்சியாளர்களை விடவும் சாஸ்திரியின் சாதனை ஒப்பிடப்பட முடியாதது என்று கருதியது சிஏசி. இந்திய அணி நம்பர் 1 இடத்தை டெஸ்ட்டில் பிடித்தது, ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக 71 ஆண்டு வரலாற்றில் இந்திய அணி கோலி தலைமையில் தொடரை வென்றது. இந்தியா மட்டுமல்ல ஆசியாவுக்கே இது சாதனையாக அமைந்தது.

ஆனால் 2015, 2019 உலகக்கோப்பைகளில் அரையிறுதி வரை வந்து இந்தியா தோல்வியடைந்ததும் சாஸ்திரி பயிற்சியின் கீழ்தான், ஆனால் இது சிஏசி முடிவைப் பாதிக்கவில்லை.

மொத்தம் 21 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 13-ல் வென்றது, 60 ஒருநாள் போட்டிகளில் 43-ல் வெற்றி 36 டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய அணி 25 போட்டிகளில் வென்றுள்ளது, இது உண்மையில் ஒரு பெரிய ரெக்கார்ட்தான் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனால் வேறு சிலர் கிரிக்கெட் வல்லுநர்களோ கேப்டனின் விருப்பத்துக்கு மாறாக எதுவும் செய்யக் கூடாது என்ற ஒரு மனநிலை பிசிசிஐ டாப் நிர்வாகத்தினரிடையே வந்த பிறகு, ஏற்கெனவே ரவிசாஸ்திரிதான் என்று முடிவெடுத்து விட்டு பட்டியலில் கடைசி 3 பேர் என்றெல்லாம் ஏன் கூறி அவர்களை நேர்காணல் என்று அவர்களின் நேரங்களையும் விரயம் செய்ய வேண்டும் என்று கேள்வியும் எழுப்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x