Published : 06 Aug 2019 03:35 PM
Last Updated : 06 Aug 2019 03:35 PM

இந்தியப் பவுலிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்த முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளர்

விராட் கோலி தலைமை இந்திய அணிக்கு இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக இருந்து வரும் நிலையில், அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக எழுந்து வரும் செய்திகளுக்கு இடையில் இன்னொரு இடது கை சுழற்பந்து வீச்சாளர் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளார்

தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே அணியின் ஸ்பின் ஆலோசகராகவும் செயல்பட்டார், ஆனால் விராட் கோலி அவரைத் திட்டமிட்டு அனுப்பிவிட்டார்.

இந்நிலையில் இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி இந்திய பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். சுனில் ஜோஷி ஏற்கெனவே வங்கதேச அணிக்கு இரண்டரை ஆண்டுகாலம் பயிற்சியாளராக இருந்து அனுபவம் பெற்றவர்.

இந்நிலையில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ஆம், நான் இந்தியப் பவுலிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளேன். வங்கதேசத்துக்காக இரண்டரை ஆண்டுகள் பயனுள்ள பயிற்சிக்காலத்திற்குப் பிறகு அடுத்த சவாலுக்கு நான் தயாராகவே இருக்கிறேன். கொஞ்ச காலமாக இந்திய அணியில் ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின் கோச் இல்லை. இங்கு என்னுடைய அனுபவம் பரிசீலிக்கப்படலாம்.

பெரும்பாலான அணிகள் வேகப்பந்து வீச்சாக இருந்தாலும் ஸ்பின்னாக இருந்தாலும் சிறப்பு வாய்ந்தவர்களை பணிக்காக வைத்திருக்கின்றனர். இந்திய அணிக்கும் ஒருவர் தேவை. அது நானாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, ஆனால் ஸ்பின் கோச் தேவை” என்றார்

ஜோஷி 1996 முதல் 2001 வரை இந்திய அணியில் பெரிய வீரர்களுடன் ஆடியுள்ளார். 15 டெஸ்ட்டில் 41 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 615 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, “எந்த ஒரு சர்வதேச அணியும் ஸ்பின் கோச் தேவையில்லை என்று நினைத்தால் அது தவறு. ஸ்பின்னராக முதிர்ச்சியடையவில்லை எனில் சர்வதேச கிரிக்கெட்டில் எந்த ஒரு வீரரையும் எளிதில் புரிந்து கொண்டு விடுவார்கள்.” என்று தன் எதிர்காலப் பணிக்கு நியாயம் சேர்க்கிறார் சுனில் ஜோஷி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x