Published : 17 Jul 2019 12:29 PM
Last Updated : 17 Jul 2019 12:29 PM
ஜகார்த்தா
இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் தொடர் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளான நேற்று ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் கோஹ், நூர் இஸூதின் ஜோடியை எதிர்த்து விளையாடியது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி 21-19, 18-21, 21-19 என்ற செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 2-வது சுற்றில் இந்தோனேஷியாவின் மார்கஸ் பெர்னால்டி, கெவின் சஞ்ஜெயா ஜோடியை எதிர்கொள்கிறது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, ஷிக்கி ரெட்டி ஜோடி முதல் சுற்றில் 25-23, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் டேபிளிங், செலினா பெய்க் ஜோடியை வீழ்த்தியது.
இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் நடைபெற்றது. பிரணவ் ஜெர்ரி சோப்ரா, ஷிக்கி ரெட்டி ஜோடி தங்களது 2-வது சுற்றில் சீனாவின் ஹெங் ஸி வெயி, ஹூவாங் யா குயாங் ஜோடியை எதிர்கொள்கிறது. அதேவேளையில் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, ஷிக்கி ரெட்டி ஜோடி 20-22, 22-20, 20-22 என்ற செட்கணக்கில் போராடி மலேசியாவின் விவியன் ஹோ, யாப் ஹெங் வென் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT