Published : 20 Jul 2015 09:31 AM
Last Updated : 20 Jul 2015 09:31 AM

2-வது டி-20: இந்தியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்தியா 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், இரு போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

ஹராரேயில் நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பேட் செய்து. அந்த அணியின் மஸகாட்ஸா 19 ரன்களில் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். மற்றவர்கள் ஓரளவே ரன் எடுக்க, சிபாபா மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். 51 பந்துகளில் 67 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வே 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் குவித்தது.

இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், மோஹித் சர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

146 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரஹானே (4), முரளி விஜய் (13) ஏமாற்றம் அளித்தனர். அதிரடியாக விளையாடிய உத்தப்பா 25 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாண்டே (0), ஜாதவ் (5) பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தனர்.

ஓரளவு நம்பிக்கையளித்த பின்னி 24 ரன்களில் வெளியேறி னார். அறிமுகப் போட்டியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 19 ரன்களில் வெளியேறினார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

ஜிம்பாப்வேயின் கிரீமர் 3 விக்கெட் வீழ்த்தினார். அஜிங்க்ய ரஹானே, கேதார் ஜாதவ் இருவரும் தேவையின்ற ரன் அவுட் ஆகினர். உத்தப்பா மோசமான ஷாட்டுக்கு பந்து வீசிய வில்லியம்ஸிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதுபோன்ற தவறுகள் இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தன.

ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளை ஜிம்பாப்வேயின் சிபாபா வென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x