Last Updated : 15 Jun, 2015 02:36 PM

 

Published : 15 Jun 2015 02:36 PM
Last Updated : 15 Jun 2015 02:36 PM

பெரு அணியின் அச்சுறுத்தலை கடைசி நிமிட கோலால் முறியடித்த பிரேசில்

சிலியில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெரு அணியை போராடி வீழ்த்தியது.

சிலியில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரில் சி-பிரிவு ஆட்டத்தில் பிரேசில் அணி பெரு அணியின் அச்சுறுத்தலை போராடி முறியடித்து வெற்றி கண்டது.

கடைசியில் "இன்ஜ்யூரி’ நேரத்தில் பிரேசில் வீரர் டக்ளஸ் கோஸ்டா அடித்த கோலின் மூலம் பிரேசில் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி வெற்றி பெற்றது.

முதல் 5 நிமிட நேர ஆட்டத்தில் தீப்பொறி பறந்தது. 3-வது நிமிடத்தில் பெரு அணி வீரர் கிறிஸ்டியன் கியூவா முதல் கோலை அடித்து 1-0 என்று முன்னிலை கொடுக்க அதிர்ச்சியடைந்த பிரேசில் ஆட்டத்தை மேலும் நெருக்கியது.

இதனால் அடுத்த 2-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் நெய்மர் ஒரு கோல் மூலம் சமன் செய்தார்.

அந்தக் கணத்திலிருந்து பெரு அணி வீரர்கள் தங்கள் இறுக்கமான தடுப்பு அரணால் பிரேசிலின் கோல் முயற்சிகளை தடுத்து வெறுப்பேற்றினர். கடைசியில் டக்ளஸ் கோஸ்டா கோல் மூலம் பிரேசில் 2-1 என்று போராடி வெற்றி பெற்றது.

பிரேசில் வீரர் டேவிட் லூயிஸ் பந்தை பின்னால் கோல் கீப்பர் ஜெஃபர்சனுக்கு அடித்த போது ஜெஃபர்சன் பந்தை அடிப்பதில் தோல்வியடைந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கியூவா முதல் கோலைத் திணித்தார்.

சரியாக 2 நிமிடங்கள் கழித்து பெரு அணி நெய்மரை ‘மார்க்’ செய்யாது போக, டேனி அல்வேஸின் பாஸை தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தி சமன் செய்தார் நெய்மர்.

கடைசியிலும், நெய்மரின் அபார ஆட்டமே வெற்றி கோலைப் பெற்றுத் தந்தது. பெரூவின் 4 தடுப்பணை வீரர்களுக்கும் போக்க்குக் காட்டி பந்தை டக்ளஸ் கோஸ்டாவிடம் அடிக்க, அங்கு அவர் பெரு கோல் கீப்பர் பெட்ரோ காலீஸ் உடன் டக்ளஸ் கோஸ்டா தனித்து விடப்பட்டார். கோஸ்டா தவறு செய்யவில்லை வெற்றிக்கான கோலை அடித்தார்.

வெற்றி குறித்து நெய்மர் கூறும் போது, “இத்தகைய போட்டித் தொடர்களில் எப்பவுமே கடினமான எதிரணியை எதிர்கொள்ள நேரிடும். அதுவும் தென் அமெரிக்க அணிகள் எப்போதுமே எதிர்கொள்ள கடினமானது. ஒருவரும் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இருப்பினும் நாங்கள் நன்றாக விளையாடியதாகவே கருதுகிறேன். எப்போதும் வெற்றியுடன் தொடங்க வேண்டும்” என்றார்.

ஆனாலும் பிரேசிலின் தடுப்பாட்டம் மேம்பட வேண்டும் என்று பயிற்சியாளர் துங்கா தெரிவித்துள்ளார். மற்றொரு சி-பிரிவு ஆட்டத்தில் வெனிசூலாவிடம் கொலம்பியா 0-1 என்று அதிர்ச்சித் தோல்வி தழுவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x