Published : 11 Jun 2015 09:47 AM
Last Updated : 11 Jun 2015 09:47 AM

அகில இந்திய வாலிபால் போட்டி: சென்னை எஸ்.ஆர்.எம். அணிக்கு 2-வது வெற்றி

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பைக்கான 24-வது அகில இந்திய வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தூத்துக்குடி மாவட்ட வாலிபால் கழகம் இணைந்து நடத்தும் இந்தப் போட்டி தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்று வருகிறது.

2-வது நாளான நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில் கேரளா போலீஸ் அணியும், மும்பை மேற்கு ரயில்வே அணியும் மோதின. இதில் முதல் செட்டை 25-22 என்ற கணக்கில் மேற்கு ரயில்வே அணி வென்றது. ஆனால் 2-வது செட்டை கேரளா போலீஸ் அணி 25-14 என்ற கணக்கில் வென்றதால் ஆட்டம் விறுவிறுப்பானது. தொடர்ந்து அசத்தலாக ஆடிய கேரளா போலீஸ் அணி 26- 24, 25- 15 என்ற கணக்கில் அடுத்த இரு செட்களை கைப்பற்றி மேற்கு ரயில்வே அணியைத் தோற்கடித்தது.

மகளிர் பிரிவு போட்டியில் கேரளா போலீஸ் அணியும், மும்பை மேற்கு ரயில்வே அணியும் மோதின. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேரளா போலீஸ் அணி 25- 19, 25- 19, 25- 21 என்ற கணக்கில் வெற்றி கண்டது.

மூன்றாவதாக நடந்த ஆடவர் பிரிவு போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும், டெல்லி இந்திய வருமான வரித்துறை அணியும் மோதின. தொடக்கம் முதலே ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.

முதல் இரு செட்டுகளை வருமான வரித்துறை அணி 25- 23, 36- 33 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. ஆனால் அடுத்த இரு செட்டுகளையும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணி 25- 23, 25- 21 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

இதனால் 5-வது செட்டுக்கு ஆட்டம் நகர்ந்தது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த செட்டை 15- 12 என்ற கணக்கில் கைப்பற்றிய சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 3- 2 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டது. இதன்மூலம் 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது எஸ்.ஆர்.எம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x