Last Updated : 05 Jun, 2015 11:06 AM

 

Published : 05 Jun 2015 11:06 AM
Last Updated : 05 Jun 2015 11:06 AM

முடிசூடா மன்னன் நடாலுக்கு முடிவு கட்டிய ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபனில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நடாலின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்.

‘தி கிங் ஆஃப் கிளே’ (களிமண் ஆடுகள ராஜா) என்றழைக்கப்படும் நடால் தனது பலமாக எந்தப் போட்டியையும், எந்த மைதானத்தையும் கருதினாரோ, அதே போட்டியில், அதே இடத்தில் இப்போது வீழ்த்தப்பட்டிருக்கிறார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள களிமண் ஆடுகளமான ரோலண்ட் கேரஸில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபனில் கடந்த 10 ஆண்டுகளில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் நடால். அங்கு அவருடைய ஆதிக்கம், இவ்வளவு வேகமாக முடிவுக்கு வரும் என யாரும் என சில மாதங்களுக்கு முன்பு வரை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு; பலசாலியை வீழ்த்த இன்னொரு பலசாலி வருவான் என்பது நடால் விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது.

18 வயதில் தொடங்கிய பயணம்

2005-ல் தனது 18-வது வயதில் முதல்முறையாக பிரெஞ்சு ஓபனில் களமிறங்கியபோதே, அதில் சாம்பியன் பட்டம் வென்ற நடால், முன்னணி வீரர்களுக்கு கிலியை ஏற்படுத்தியதோடு, டென்னிஸ் உலகையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன்பிறகு பிரெஞ்சு ஓபனைப் பொறுத்தவரையில் அவருடைய ராஜியம்தான். 2008 வரை பிரெஞ்சு ஓபனில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த நடால், 2009-ல் 4-வது சுற்றில் ஸ்வீடனின் ராபின் சோடர்லிங்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

ஆனாலும் அடுத்த ஆண்டே பிரெஞ்சு ஓபனில் மீண்டும் சாம்பியன் ஆனார் நடால். கடந்த ஆண்டு வரை பிரெஞ்சு ஓபன் அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது. 2012-ல் 7-வது முறையாக சாம்பியன் ஆனபோது பிரெஞ்சு ஓபனில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.

முன்னதாக பிரெஞ்சு ஓபனில் ஸ்வீடனின் ஜோர்ன் போர்க் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. 1981-ல் போர்க் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றபோது, அவருடைய சாதனையை முறியடிப்பது கடினம் என பேசப்பட்டது.

நடால் 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய போது, அது தொடர்பாக பேசிய 1989 பிரெஞ்சு ஓபன் சாம்பியனான மைக்கேல் சாங், “அவருடைய சாத னைக்கு அருகில் யாராவது வரு வார்கள் என்றுகூட யாரும் நினைத்த தில்லை. அதை முறியடிக்க வாய்ப்பே இல்லை என்று நினைத் தார்கள். போர்க்கின் சாதனையை தொட முடியும் என்றுகூட நாங்கள் நினைத்ததில்லை” என்றார்.

சாதனைப் பயணம்

கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸில் ஆதிக்கம் செலுத்திய நடால், டென்னிஸ் வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். ஆண்ட்ரே அகாஸிக்குப் பிறகு ‘கோல்டன் கிராண்ட்ஸ்லாம்’ வென்ற 2-வது வீரர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் மற்றும் ஒலிம்பிக் போட்டி ஆகிய 5 போட்டிகளிலும் சாம்பியனாவதே ‘கோல்டன் கிராண்ட்ஸ்லாம்’ ஆகும்.

இதுவரை 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் நடால், 2010-ல் அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றபோது அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டி களிலும் சாம்பியன் பட்டம் வென்ற 7-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதுதவிர மேற்கண்ட சாதனையை ‘ஓபன் எரா’வில் படைத்த இளம் வீரர் என்ற சாதனையும் அவர் வசமானது.

‘ஹார்ட் கோர்ட்’, ‘கிராஸ் கோர்ட்’, ‘கிளே கோர்ட்’ ஆகிய மூன்றிலும் தலா இரு கிராண்ட்ஸ் லாம் பட்டங்களை வென்ற இருவரில் ஒருவரான நடால், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். அதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையைப் படைத்தார். தொடர்ச்சியாக 10 ஆண்டுகளில் ஏதாவது ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற ஒரே வீரரும் நடால்தான்.

இறங்குமான 2015

தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருந்த நடாலுக்கு, 2015 சீசன் பலத்த அடியாகவே பார்க்கப்படுகிறது. இந்த சீசனை கத்தார் ஓபனில் இருந்து தொடங்கிய நடால், அதில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். தொடர்ந்து ஆஸ்திரேலிய ஓபனில் களமிறங்கிய நடால், அதன் காலிறு தியில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சிடம் தோல்வி கண்டார்.

பின்னர் நடைபெற்ற ரியோ ஓபன் அரையிறுதியில் இத்தாலியின் பாபியோ பாக்னினியிடமும், ரோம் மாஸ்டர்ஸ் காலிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்காவிடமும் தோல்வி கண்ட நடால், தரவரிசையிலும் பெரும் சறுக்கலை சந்தித்தார். 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதனால் பிரெஞ்சு ஓபன் போட்டித் தரவரிசையில் அவருக்கு 6-வது இடமே கிடைத்தது.

பேசப்பட்ட காலிறுதி

பிரெஞ்சு ஓபனின் டிரா (யாருடன் யார் மோதுவது என்பதை குலுக்கல் முறையில் தீர்மானிப்பது) வெளி யானபோது நடாலும், ஜோகோ விச்சும் காலிறுதியில் மோதுவது உறுதியானது. அப்போதே இவர்கள் இடையிலான காலிறுதி ஆட்டம் பற்றி உலக முழுவதும் இருக்கும் டென்னிஸ் ரசிகர்கள் பேசத் தொடங்கினார்கள்.

அதற்கு நடால் பார்மில் இல்லை என்பது ஒரு காரணம் என்றால், மறுமுனையில் ஜோகோவிச், களிமண் ஆடுகளத்தில் நடைபெற்ற சமீபத்திய போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது மற்றொரு காரணம். இந்த சீசனில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச், பின்னர் நடைபெற்ற இண்டியன் வெல்ஸ், மியாமி, மான்டி கார்லோ, ரோம் போன்ற ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டிகளிலும் முத்திரைப் பதித்தார்.

அனைவரும் எதிர்பார்த்தது போலவே நடாலும், ஜோகோவிச்சும் காலிறுதியில் சந்தித்தார்கள். போட்டி நடைபெறுவதற்கு முந்தைய தினத்திலும் சரி, போட்டி நடைபெற்றபோதும் சரி, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தொடங்கி எல்லாவற்றி லும் ஜோகோவிச்-நடால் காலிறுதி ஆட்டம் பற்றிய பேச்சுகள் ஹிட் அடித்தன.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஆட்டம் விறுவிறுப்பில்லாமல் போனது. எப்போதுமே எதிராளியை அவ்வளவு எளிதாக வெல்லவிடாத நடால், இந்த முறை 7-5, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சிடம் சரணடைந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

சாதிப்பாரா ஜோகோவிச்?

பிரெஞ்சு ஓபனில் இதுவரை 72 ஆட்டங்களில் விளையாடிய நடால், 2-வது தோல்வியை சந்தித்திருக்கிறார். பிரெஞ்சு ஓபனில் தொடர்ச்சியாக 39 ஆட்டங்களில் வென்றிருந்த நடாலின் தொடர் வெற்றிக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2012, 2014 பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் நடாலிடம் கண்ட தோல்விக்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கும் ஜோகோவிச், ரோலண்ட் கேரஸின் முடிசூடா மன்னன் நடாலின் ஆதிக் கத்துக்கு முடிவு கட்டியிருக்கிறார்.

நடால்-ஜோகோவிச் இடையி லான காலிறுதி ஆட்டத்தில் வெல் பவரே பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்வார் என கணிக்கப் பட்டிருக்கிறது. இந்த சீசனில் தொடர்ச்சியாக 27 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்று அனைத்து கிராண்ட்ஸ்லாம் போட்டி களிலும் வென்ற 8-வது வீரர் என்ற சாதனையைப் படைப்பாரா என்பதற்கு வரும் ஞாயிற்றுக்கிழமை பதில் கிடைத்துவிடும்.

நடாலின் வருகை

ஆனால் நடால் மீண்டும் பார்முக்கு திரும்புவாரா, சர்வதேச டென்னிஸில் ஆதிக்கம் செலுத்து வாரா என்பதைக் கண்டறிய இன்னும் கொஞ்ச காலம் காத்திருந்துதான் ஆக வேண்டும். விடாப்பிடியாக போராடும் குணம் கொண்டவரான நடால், நிச்சயம் பலம் வாய்ந்த வீரராக மீண்டும் களம் திரும்பு வார் என ரசிகர்கள் நம்புகின்றனர். நடாலும் அப்படித்தான் கூறியிருக் கிறார். நடாலின் வருகைக் காக காத்திருப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x