Published : 06 Jun 2015 06:05 PM
Last Updated : 06 Jun 2015 06:05 PM
இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் திராவிட் இந்தியா-ஏ மற்றும் இந்தியா அண்டர்-19 அணிகளுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் சச்சின், லஷ்மண், கங்குலி இடம்பெற ராகுல் திராவிட் ஏன் இல்லை என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர், ‘அனைவரையும் ஒரே நிலையில் இணைக்க முடியாது’ என்றும் ராகுல் திராவிட் போன்ற ஒரு வீரரை எதாவது ஒரு நிலையில் நிச்சயம் பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராகவே அவர் நியமிக்கப்படுவார் என்று யூகங்கள் எழுந்தன, ஆனால் பயிற்சியாளராக முழுநேரம் தன்னால் இப்போதைக்கு செலவிட முடியாது என்று ராகுல் திராவிட் கூறியதாக எழுந்த செய்திகளை அடுத்து, திராவிட் இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு அளிக்கப்படலாம் என்று செய்தி வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தன.
இந்நிலையில் ராகுல் திராவிட், இந்தியா-ஏ மற்றும் இந்தியா அண்டர்-19 அணிகளுக்கான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
”இந்தியா ஏ, இந்தியா அண்டர்19 அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்க திராவிட் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதே நல்ல செய்தி” என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
திராவிடின் முதல் பயிற்சியாளர் அத்தியாயம் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு தொடர். இது ஜூலையில் நடைபெறுகிறது. அதே போல் வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் அண்டர்-19 உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்திய இளையோர் அணி திராவிடின் பயிற்சியில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT