

பிசிசிஐ அமைத்த ஆலோசனைக் குழுவில் சச்சின், கங்குலி, லஷ்மண் நியமிக்கப்பட்ட பிறகு ராகுல் திராவிடையும் பிசிசிஐ தனது செயல் திட்டத்துக்குள் கொண்டு வர முடிவெடுக்கலாம் என்று தெரிகிறது.
அனுராக் தாக்கூர் ஏற்கெனவே இது பற்றி கூறும்போது, “ராகுல் திராவிட் போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை பிசிசிஐ சரியான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளூம். காலம் வரும்போது இதற்கான அறிவிப்பு வரும். ஒரே குழுவில் அனைவரையும் கொண்டு வர முடியாது” என்று கூறியதும் ராகுல் திராவிடுக்கு அளிக்கப்படும் புதிய பொறுப்பு பற்றிய செய்தியுடன் இணைத்து நோக்கத்தக்கது.
ராகுல் திராவிட் மேற்பார்வையின் கீழ் சஞ்சு சாம்சன், கருண் நாயர், தீபக் ஹூடா போன்றோர் சிறப்பாக வளர்ந்து வருவதையடுத்து இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக அண்டர்-19 மற்றும் இந்தியா ஏ பயிற்சி பொறுப்புகள் ராகுல் திராவிடுக்கு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஏற்கெனவே இங்கிலாந்து தொடரின் போது இந்திய அணியின் அறிவுரையாளராக செயல்பட்டார். இதனையடுத்து தலைமைப் பயிற்சியாளராக திராவிட் நியமிக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்தன.
ஆனால், திராவிட் முழுநேரப் பயிற்சியாளர் பொறுப்பை பணிச்சுமை காரணமாக ஏற்கத் தயங்கியதாகக் கூறப்படுகிறது.