Published : 09 Jun 2015 09:50 AM
Last Updated : 09 Jun 2015 09:50 AM
2018, 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் உரிமையை பெறுவதற்கு ரஷ்யா மற்றும் கத்தார் நாடுகள் லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உலகக் கோப்பையை நடத்தும் வாய்ப்பை அந்த இரு நாடுகளும் இழக்க நேரிடும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) எச்சரித்துள்ளது.
பிஃபாவில் நிகழ்ந்துள்ள பல்வேறு முறைகேடுகள் கால் பந்து உலகை உலுக்கியுள்ளன. பிஃபாவில் ரூ.984 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அதில் 14 பிஃபா நிர்வாகிகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் மார்க்கெட்டிங் நிறுவன பிரதிநிதிகள் ஆகியோ ருக்கு தொடர்பிருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. பிஃபா நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக பிஃபா தலைவர் செப் பிளேட்டர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது மட்டுமின்றி 2010 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை வழங்குவதற்கு தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து பிஃபா நிர்வாகிகள் லஞ்சம் பெற்றது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதேபோல் 2018, 2022 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமை வழங்கப்பட்டதில் முறை கேடு நடந்துள்ளதாக புகார் எழுந்த தைத் தொடர்ந்து அது தொடர்பாக ஸ்விட்சர்லாந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பிஃபா தணிக்கை மற்றும் குறைதீர்ப்பு குழு தலைவர் டொமினிகோ ஸ்கேலா, ஸ்விட்சர்லாந்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ரஷ்யா, கத்தார் நாடுகளுக்கு உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமை வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த நாடுகள் போட்டியை நடத்தும் உரிமை ரத்து செய்யப்படும்.
எனினும் இதுவரை அதற்கான ஆதாரங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை என குறிப்பிட்டுள்ளார். உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை பறிக்கும் அதிகாரம் பிஃபாவுக்கு உள்ளது என்பதை தெரிவித்த முதல் பிஃபா நிர்வாகி ஸ்கேலாதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT