Published : 18 Jun 2015 02:57 PM
Last Updated : 18 Jun 2015 02:57 PM

நெய்மரை அடக்கியாண்ட சான்சேஸ்: பிரேசிலை வென்றது கொலம்பியா

சிலியில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா கால்பந்து போட்டியில் நட்சத்திர வீரர் நெய்மர் திணற, பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கொலம்பியா.

கொலம்பிய அணியின் ஜெய்சன் முரில்லோ 36-வது நிமிடத்தில் அடித்த கோல் வெற்றி கோலாக மாறியது. பிரேசிலும் தனக்கு கிடைத்த அரிதான கோல் வாய்ப்புகள் இரண்டை கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெரு அணிக்கு எதிரான ஆட்டத்திலேயே மஞ்சள் அட்டை வாங்கிய நெய்மர், இந்தப் போட்டியில் கோல்போஸ்டிலிருந்து திரும்பிய பந்தை கையால் தொட்டதற்காக மீண்டும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டார். ஆனால் இது போதாதென்று இறுதி விசில் அடிக்கப்பட்ட பிறகு கொலம்பிய வீரர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்ததோடு, முரில்லோவை தலையால் முட்டியதாகவும் நெய்மருக்கு சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

அடுத்த போட்டியில் நெய்மர் விளையாட முடியாமல் போவதற்கு ஏற்கெனவே வாங்கிய மஞ்சள் அட்டைகளே போதுமானது. இதில் கூடுதலாக சிகப்பு அட்டை வேறு அவருக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எத்தனை போட்டிகளுக்கு அவர் தடை செய்யப்படுவார் என்பது தெரியவில்லை.

2014 உலகக்கோப்பை காலிறுதியில் அடைந்த தோல்விக்கு பிரேசிலை பழிதீர்த்தது கொலம்பியா.

மோதும் உணர்ச்சிகளின் பின்னணி:

கடந்த உலகக் கோப்பையின் காலிறுதிப் போட்டியில் கொலம்பிய வீரர் ஸுனைகா, பின்னாலிலிருந்து வன்முறையாகத் தடுக்க நினைக்க, படுகாயமடைந்த நெய்மரின் உலகக் கோப்பை கனவு அன்று முடிவுக்கு வந்தது. இதோடு மட்டுமல்லாமல் நெய்மரின் கால்பந்து ஆட்டமே முடிவுக்கு வரும் வகையில் அவருக்கு முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தினால் இரு அணிகளுக்கும் கடும் பகைமை நிலவி வந்தது. இந்நிலையில் கொலம்பிய நட்சத்திர வீரர் ரோட்ரிக்ஸை அச்சமூட்டும் வகையில் பிரேசில் வீரர் பெர்டினாண்டினோ மற்றும் தடுப்பு வீரர்கள் தங்கள் ஆட்டத்தை விளையாடினர்.

இதனால் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அதிகரிக்க நெய்மர்-முரில்லோ மோதல் ஏற்பட்டது. இது நெய்மரின் சிகப்பு அட்டை அபராதத்தில் போய் முடிந்துள்ளது. இதனால் அவர் அடுத்த போட்டியில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது. மீண்டும் கொலம்பியா மனோவியல் ரீதியாக பிரேசிலை பதம் பார்த்துள்ளது.

நெய்மரை அடக்கியாண்டால் பிரேசிலை வீழ்த்தலாம் என்ற கொலம்பியாவின் ஆட்டம்:

இந்த போட்டி நெய்மருக்கும் ரோட்ரிக்ஸுக்குமானது என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் நடந்தது நெய்மருக்கும், கார்லோஸ் சான்சேஸுக்குமான போட்டியாக இருந்தது.

கடந்த கோப்பா அமெரிக்கா போட்டித் தொடரில் லயனோல் மெஸ்ஸியை சிறப்பாக அடக்கினார் சான்சேஸ். ஆனால் அர்ஜெண்டினாவுக்கு மெஸ்ஸியை விட பிரேசிலுக்கு நெய்மார் முக்கியம். எனவே நெய்மரை மந்தமாக்கி விட்டால் ஆட்டத்தையே வென்றதற்கு சமம்.

இந்த எதிர்பார்ப்பை தடுப்பாட்ட வீரராக சான்சேஸ் சிறப்பாகச் செய்தார். நெய்மரின் பாய்ச்சலை அதன் தொடக்க இடத்திலேயே அடக்கினார். ஒவ்வொருமுறையும் நெய்மர் எழுச்சியுற்ற போதும், சான்சேஸ் அவரை காலி செய்தார்.

ஏற்கெனவே வெனிசுலா அணியிடம் தோற்ற கொலம்பியா அணி இம்முறை பிரேசிலை வீழ்த்தும் முனைப்பில் நெய்மரை அடக்கி ஆண்டது.

பிரேசிலின் வெறுப்பு பயங்கரமாக அதிகரித்ததன் விளைவு நிறைய தப்பாட்டங்களை ஆடி ஃபவுல் செய்தனர். இத்தகைய தப்பிதத்தில்தான் 36-வது நிமிடத்தில் குவாட்ராடோவின் அற்புதமான ஃப்ரீ கிக்கை ஜெய்சன் முரில்லோ கோலாக மாற்றினார்.

பிரேசில் அணி நொந்து நூலான போது 2-வது வாய்ப்பு ஏற்பட்டது, அதனை கொலம்பிய வீரர் ஃபால்கோ சுயநலமாக தானே கோல் அடிக்க முயன்று தோல்வியடைந்தார். யாரிடம் வேண்டுமானாலும் பாஸ் செய்திருக்கலாம் அது கோலாக மாறியிருக்கும்.

இடது களத்தில் ஃபிரெட்டுக்கு பதிலாக பிலிப் கூட்டின்ஹோவை இறக்கினார் பிரேசில் பயிற்சியாளர் துங்கா. கொலம்பிய வீரர் சான்சேஸிடமிருந்து நெய்மாரைப் பிரித்து வேறிடம் மாற்றப்பட்டது.

இப்போது ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டது. முரில்லோ பந்தை பேக்பாஸ் செய்ய, கோல் கீப்பர் டேவிட் ஆஸ்பினா சோடை போக, பிரேசில் வீரர் ஃபர்மினோவுக்கு அருமையான கோல் வாய்ப்பு. ஆனால் மேலே அடித்து சொதப்பினார். திறந்த கோல் அது, இதை கோட்டைவிட்டார். இது நடந்தது 60-வது நிமிடம் பக்கம் என்றால் அதன் பிறகும் நெய்மாரை சிறப்பாக தடுத்து, பிரேசிலை முடக்கியது கொலம்பியா.

கோப்பா அமெரிக்கா கால்பந்தில் பிரேசில் அணியை கொலம்பியா 1991-ம் ஆண்டு தொடருக்குப் பிறகு வீழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x