Published : 11 May 2015 02:41 PM
Last Updated : 11 May 2015 02:41 PM

இருதரப்பு தொடர்களுக்கு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புதல்

இருதரப்பு கிரிக்கெட் போட்டித் தொடர்களை நடத்த இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்தியா-பாகிஸ்தான் இடையே 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், இரண்டு டி20 போட்டிகள் நடைபெறும்.

இது குறித்து பிசிசிஐ தலைவர் டால்மியா முன்னிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷரியர் கான் தெரிவிக்கும் போது, “2014-ம் ஆண்டு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பகுதியாக இருதரப்பு தொடருக்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் தொடர் மூலம் இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகிறது. டிசம்பர் மாதம் திட்டமிட்டபடி தொடர் நடைபெறும். தயாரிப்புகள் முழுவேகத்துடன் நடைபெற்று வருகின்றன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு நன்றி. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி 8 ஆண்டுகளில் 5 கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுகின்றன. டால்மியாவுடனான எனது உறவு நீண்ட காலமாக இருந்து வரும் ஒன்று, 2004-ம் ஆண்டு தொடரை நாங்கள் திட்டமிட்டபடி நடத்தினோம், இப்போது நடைபெறவிருக்கும் தொடரும் அவரது முயற்சிகளினால் உருவானதே.

இந்த கிரிக்கெட் தொடருக்கான உள்துறை அமைச்சக மற்றும் அரசின் ஆதரவை எதிர்நோக்குகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x