

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்தத் தோல்வியினால் ப்ளேஆஃப் சுற்றில் ஆடும் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது.
கொல்கத்தா நிர்ணயித்த கடின இலக்கை விரட்ட வந்த கெயில் இந்த போட்டியிலும் ஏமாற்றமளித்தார். வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய கேப்டன் கோலி மற்றும் டாகாவாலே இணை சிறிது நம்பிக்கையளித்தது. 10.3 ஓவர்கள் களத்தில் இருந்த இந்த ஜோடி 85 ரன்களை சேர்த்தது. கோலி 38 ரன்களுக்கு (31 பந்துகள், 3 பவுண்டர், 1 சிக்ஸர்) சுனில் நரைன் பந்தில் வீழ்ந்தார். அதே ஓவரில் டாகாவாலே 45 ரன்களுக்கு (36 பந்துகள், 5 பவுண்டரி, 1 சிக்ஸர்) வீழ்ந்தார்.
7 ஓவர்களில் 103 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிவில்லியர்ஸ் மற்றும் யுவராஜ் சிங் களத்தில் இருந்தனர். 16-வது ஓவரில் யுவராஜ் சிங் 22 ரன்கள் எடுத்தாலும் அடுத்த ஓவரை வீச வந்த நரைன் யுவராஜ் மற்றும் டிவில்லியர்ஸ் இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பினார்.
தோல்வி உறுதியாகிய நிலையில் மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமல் ஆடுவதே பெங்களூரு அணிக்கு பெரும்பாடாக இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வென்று ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதே நேரத்தில் பெங்களூரு ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது.
முன்னதாக டாஸில் வென்ற கோலி, கொல்கத்தாவை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் ஓவரில் கேப்டன் காம்பீர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து ஆட வந்த பாண்டே 13 ரன்களுக்கு தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். யூசுப் பதான் 2 சிக்ஸர் 1 பவுண்டரியோடு 22 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய ஷகிப் அல் ஹசன் உத்தப்பாவுடன் இணைந்து பெங்களூரு பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 8-வது ஓவரில் களத்தில் இணைந்த இந்த ஜோடி 70 பந்துகளை சந்தித்து 121 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தது.
உத்தப்பா 34 பந்துகளிலும், ஷகிப் 32 பந்துகளிலும் அரை சதத்தைக் கடந்தனர். 19-வது ஓவரில் ஷகிப் அல் ஹசன் 60 ரன்களுக்கு (38 பந்துகள், 5 பவுண்டரி, 3 சிக்ஸர்) ஆட்டமிழந்தாலும் அப்போது அணியின் ஸ்கோர் 177 ரன்களைத் தொட்டிருந்தது.
கடைசி ஓவரில் மேலும் 12 ரன்கள் சேர, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை கொல்கத்தா குவித்தது. வெற்றி இலக்கை நோக்கி பெங்களூரு தற்போது ஆடிவருகிறது.