Published : 15 May 2015 03:34 PM
Last Updated : 15 May 2015 03:34 PM
வங்கதேசத்தில் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி செல்லவுள்ள நிலையில், அந்தத் தொடரிலிருந்து தன்னை விடுவிக்குமாறு விராட் கோலி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்றதையடுத்து விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இங்கிலாந்தில் விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் முதல் வரிசையாக உலகக்கோப்பை மற்றும் தற்போது ஐபிஎல் என்று இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர். இதனால் ஓய்வு தேவை என்று விராட் கோலி பிசிசிஐ-யிடம் வங்கதேச தொடரிலிருந்து விடுப்பு கோரியதாக கிரிக்கெட் செய்தி வட்டாரங்கள் சில தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது, ஜூன் 10-ம் தேதி இந்தத் தொடர் தொடங்குகிறது.
கோலி மட்டுமல்லாது கடந்த ஒரு ஆண்டாக நிறைய பயணம் மேற்கொண்டு விட்டதாக மற்ற மூத்த வீரர்களும் வங்கதேசத் தொடரிலிருந்து விலக்கு கேட்பதாகவும் கூறப்படுகிறது.
வங்கதேச தொடருக்கான இந்திய அணியை சந்தீப் பாட்டீல் தலைமை தேர்வுக் குழு மே 20-ம் தேதி தேர்வு செய்வது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச தொடருக்குப் பிறகு இந்திய அணி ஜிம்பாப்வே, மற்றும் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT