Published : 08 May 2015 07:25 PM
Last Updated : 08 May 2015 07:25 PM

கோபத்தில் ஸ்டீவ் வாஹ்-ஐ தாக்கச் சென்றேன்: சுயசரிதையில் கர்ட்லி ஆம்ப்ரோஸ்

மேற்கிந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கர்ட்லி ஆம்புரோஸ் 'Curtly Ambrose - Time to Talk' என்ற தலைப்பில் சுயசரிதை நூலை வெளியிட்டுள்ளார்.

1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியில் தனக்கும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹிற்கும் ஏற்பட்ட தகராறு பற்றி எழுதியுள்ளார். கைகலப்பு அளவுக்கு சென்றது அந்த வாக்குவாதம் என்பது குறிப்பிடத்தக்கது. ரிச்சி ரிச்சர்ட்ஸன் மட்டும் தடுக்கவில்லை என்றால் அன்று ஸ்டீவ் வாஹ்-ஐ ஆம்ப்ரோஸ் தாக்கியிருப்பார்.

ஸ்டீவ் வாஹ் எதிரணி வீரர்களை தனது வார்த்தைகளால் முடக்கும் வாய் சாதுரியம் படைத்தவர் என்பது அவருடன் விளையாடிய அனைவரும் அறிந்த ஒன்று.

ஸ்டீவ் வாஹிற்கு தொடர்ந்து துல்லியமான எழும்பும் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினார் ஆம்ப்ரோஸ், ஸ்டீவ் வாஹ் எப்போதுமே பவுன்சர்களுக்குக் குதித்து குதித்து ஆடுவார். அவர் புல், ஹூக் ஆடும் பேட்ஸ்மென் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

ஆம்புரோஸ் தொடர்ந்து அவ்வாறு வீசி ஸ்டீவ் வாஹ் அருகில் சென்று அவரை கண்ணுக்கு கண் நேராக உற்று நோக்கி வந்தார். அப்போது ஸ்டீவ் வாஹ், ஏதோ ஒரு கெட்ட வார்த்தையுடன், ‘என்ன பார்க்கிறாய்?’ என்பது போல் கேட்டிருக்கிறார். ஆனால் பந்துவீசும் மூடில் இருந்த ஆம்ப்ரோஸ் அதனை காதில் வாங்கவில்லை.

ஆனால், உணவு இடைவேளைக்கு ஓய்வறைக்குச் செல்லும் போது சக வேகப்பந்து வீச்சாளர் கென்னத் பெஞ்சமின், ஸ்டீவ் வாஹ் திட்டியதை ஆம்புரோஸிடம் ‘போட்டுக் கொடுக்க’ ஆம்ப்ரோஸ் பயங்கர கடுப்பாகியுள்ளார்.

"நான் ஸ்டீவ் வாஹை முறைத்துப் பார்த்த பிறகு உடனடியாக பந்துவீச்சிற்கு திரும்பி விட்டேன், இதனால் அவர் என்ன கூறினார் என்று நான் காதில் வாங்கவில்லை. ஆனால் கென்னத் பெஞ்சமின், ஸ்டீவ் வாஹ் என்ன கூறினார் என்று என்னிடம் கூறிய போது எனக்குள் நெருப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது, இதனை இப்படியே விட்டுவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

எங்களுக்குள் நிறைய மோதல்கள் முன்பு ஏற்பட்டுள்ளன, ஆனால், இப்போதைய மரியாதைக் குறைவான போக்கு என்னில் கோபக்கனலை ஏற்படுத்தியது. அவர் என் பந்து வீச்சில் இதற்கு முன்பாக ரன்களை எடுத்துள்ளார், ஆனால் எதுவும் அவரிடம் பேசியதில்லை. ஆனால் டிரினிடாடில் ஆட்டம் என் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது, அவர் பந்துவீச்சை எதிர்கொள்வதில் நிலைகுலைந்து தடுமாறிக் கொண்டிருந்த போது வசை வார்த்தை கூறியதை என்னால் ஏற்கமுடியவில்லை. அவர் மீது எனக்கு எப்பவுமே மதிப்பு உண்டு, அதே போல் அவரும் என்னை மதிப்பார் என்றே நான் நினைத்தேன்.

ஓய்வறைக்குச் சென்று அவரிடம் விசாரிக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் களத்தில் சந்திப்பதே சிறந்தது என்று முடிவெடுத்தேன்.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்டீவ் வாஹிடம் நேரடியாகக் கேட்டேன், என்ன கூறினீர்கள் என்று. அப்போது அவர், ‘நான் என்ன கூற விரும்புகிறேனோ அதைக் கூறுவேன்’ என்றார். இது அவர் என்னை வசைபாடியதை உறுதி செய்தது.

அப்போதுதான் அவரை ‘கவனிக்க’ வேண்டும் என்று தோன்றியது. 'இன்னொரு முறை என்னை நோக்கி வசை வார்த்தைகளை பிரயோகிக்காதே' என்றேன்.

என்னுடைய கோபம் வெடிக்கும் நிலையில் இருந்தது. நான் அவரிடம் கேட்ட போது ‘ஒன்றுமில்லையே’ என்று கூறியிருந்தால் கூட அங்கேயே அந்த விவகாரம் முடிந்திருக்கும். ஆனால் அவர் மீண்டும் என் மீது பாய்ந்ததில் உண்மையில் நான் பயங்கர கோபாவேசமானேன்.

அப்போது “இதோ பார், உன்னை இங்கேயே, இப்போதே அடித்து பெயர்த்து விடுவேன், என்னுடைய கிரிக்கெட் வாழ்வே முடிந்தாலும் கவலையில்லை’ என்றேன். அப்போது ரிச்சி ரிச்சர்ட்ஸன் என் கையைப் பிடித்து இழுத்து, தடுத்து, மறந்து விடுமாறு கூறினார்.

ரிச்சி ரிச்சர்ட்ஸன் செய்தது நல்ல காரியம், ஏனெனில் அன்று நான் எனது கட்டுப்பாட்டை இழந்தேன்” என்று ஆம்ப்ரோஸ் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x