Last Updated : 02 Apr, 2015 02:52 PM

 

Published : 02 Apr 2015 02:52 PM
Last Updated : 02 Apr 2015 02:52 PM

வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் திறமையை அடையாளம் கண்ட சச்சின்

மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் திறமை மிக்கவர் என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகால கடின உழைப்புக்குப் பிறகு முதல் தர கிரிக்கெட்டில் 90 விக்கெட்டுகளை கைப்பற்றிய 23-வயது வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் ஜூலையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாடவுள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்பாக ரஞ்சி டிராபியில் அறிமுகமான போது ஷர்துல் வீழ்த்திய 6 விக்கெட்டுகள் 75.66 என்ற அதிகப்படியான சராசரியில் எடுத்தது பற்றி அவர் மீது அதிருப்தி இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் பந்துவீச்சில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ரஞ்சி கிரிக்கெட் சீசனில் கர்நாடகாவின் வினய் குமார் 18.72 என்ற சராசரியின் கீழ் 48 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடிக்க, ஷர்துல் தாக்கூர் இதே 48 விக்கெட்டுகளை 20.81 என்ற சராசரியின் கீழ் எடுத்து அசத்தியுள்ளார்.

ஒரு வலைப்பயிற்சியின் போது சச்சின் டெண்டுல்கர் இவருக்கு ஆலோசனை வழங்க, இலக்கில்லாமல் வீசிக் கொண்டிருந்த ஷர்துல் இந்திய அணியின் எதிர்கால வீச்சாளர் என்ற அளவுக்கு உயர்வு பெற்றார்.

இவரது வளர்ச்சி பற்றி சச்சின் டெண்டுல்கர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “6 ஆண்டுகளுக்கு முன்பாக ஷர்துலின் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடியிருக்கிறேன். அப்போதே நான் எனது நண்பர்களிடம் கூறினேன், ஷர்துலிடம் நிறைய திறமைகள் இருக்கிறது என்று. நான் ஷர்துலிடம், உடல் எடையைக் குறைத்தால் மட்டுமே உயர்தர கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் என்றேன். இதனை முதலில் சாதித்து விட்டால் ஆட்டம் தானாக வரும் என்றேன். அதன் பிறகே அவர் கட்டுக்கோப்பாக இருந்து, தற்போது கவனத்தைக் கூட்டியுள்ளார்” என்றார் சச்சின்.

மும்பை அணிக்கு ஜம்மு-காஷ்மீர் அணியிடம் ஏற்பட்ட தோல்வி மறக்கக் கூடிய அனுபவமாகிவிட்டது. ஆனால் அதன் பிறகு ரயில்வே அணிக்கு எதிராக ஷர்துல் 59 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

கர்நாடகாவுக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் 86 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஷர்துல். தற்போது 8-வது ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு விளையாடுகிறார். இது அவருக்கு ஒரு பெரிய அனுபவத்தைக் கொடுக்கும். ஏனெனில் மிட்செல் ஜான்சனுடன் பந்து வீசும் வாய்ப்பு உள்ளது, தவிர வலைப்பயிற்சியில் சேவாக், முரளி விஜய், ஜார்ஜ் பெய்லி, டேவிட் மில்லர், கிளென் மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ் போன்ற உலகின் தலை சிறந்த அதிரடி மன்னர்களுக்கு இவர் பந்து வீசும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த ரஞ்சி தொடரில் கர்நாடகா கேப்டன் வினய் குமார் அபாரமாக பந்துவீசியுள்ளார், சக வீரர் அபிமன்யு மிதுனும் நன்றாக வீசி வருகிறார். இவர்கள் இருவரும் தேசிய அணியில் இடம்பெற காத்திருக்கின்றனர். ஷர்துல் தாக்கூரும் காத்திருக்கிறார்.

அதே போல் அசாம் ஆஃப் ஸ்பின்னர் ஸ்வரூபம் பர்கயாஸ்தாவின் பந்துவீச்சும் தேர்வுக்குழுவினரை கவர்ந்துள்ளது.

ஆனால், அனைவரையும் காட்டிலும் மும்பையின் ஷர்துல் தாக்கூரின் பந்து வீச்சு எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x