Last Updated : 01 Apr, 2015 06:43 PM

 

Published : 01 Apr 2015 06:43 PM
Last Updated : 01 Apr 2015 06:43 PM

இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி 2-வது சுற்றில் சாய்னா

மலேசியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தோனேசிய வீராங்கனை மரியா ஃபெபியை நேர் செட்களில் ஊதித்தள்ளினார் சாய்னா நெவால்.

உலகின் நம்பர் 1 வீராங்கனையாக வியாழனன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ள நிலையில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிறுவிய சாய்னா 21-13, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அடுத்த சுற்றில் சீன தகுதி வீராங்கனை யோ சுயீ என்பவரை எதிர்கொள்கிறார்.

முதல் செட்டில் இந்தோனேசிய வீராங்கனைக்கு எந்த ஒரு வாய்ப்பையும் அளிக்காத சாய்னா 12-4 என்று மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தினார். பிறகும் ஆதிக்கம் செலுத்தி 19-13 என்ற நிலையில் இரண்டு புள்ளிகளை அடுத்தடுத்து பெற்று முதல் செட்டைக் கைப்பற்றினார்.

2-வது செட்டில் மரியா ஃபெபி 4-2 என்று தொடக்கத்தில் சற்றே கை ஓங்கியிருந்தார். ஆனால், சாய்னா அதன் பிறகு சில அபாரமான ஷாட்களை விளையாடி 10-6 என்று முன்னிலை பெற்றார்.

ஆனால், மரியா ஃபெபி மீண்டும் நன்றாக பதிலடி கொடுத்து 10-10 என்று சமன் செய்து பிறகு சமநிலை 15-15 என்று தொடர்ந்தது. ஆனால் அதன் பிறகு சாய்னாவின் ஆட்டம் பொறிபறக்க இந்தோனேசிய வீராங்கனை தோல்வி தழுவினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x