Published : 14 May 2014 05:30 PM
Last Updated : 14 May 2014 05:30 PM

காதலியை சுட்டுக்கொன்ற வழக்கு: ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு மனநல சோதனை

தனது காதலி ரீவா ஸ்டீன்கேம்ப் என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக மாற்றுத் திறனாளியும், ஒலிம்பிக் விளையாட்டு வீரருமான ஆஸ்கர் பிஸ்டோரியஸ் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது. அவருக்கு மனநல சோதனை தேவைப்படுவதாக கோரப்பட்டதையடுத்து நீதிபதி அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

ஆஸ்கர் பிஸ்டோரியஸ் அப்போது கடும் மன இறுக்கத்திலும் பதட்டத்திலும் இருந்ததாக அவருக்கு ஆதரவாக சாட்சி அளித்த ஒருவர் கூறியதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் மனநல சோதனை தேவை என்று கோரிக்கை வைத்தார்.

அதாவது அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தபோது கொலை செய்துவிட்டார் என்ற ரீதியில் அவரை தப்பிக்கச் செய்வதற்கான முயற்சிகள் இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்த கோரிக்கை நீதிபதியால் ஏற்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பிஸ்டோரியஸ் தனது காதலியை சுட்டுக் கொன்றார். அவரே தவறுதலாக தான் கொலை செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞரோ சண்டைக்குப் பிறகு தெரிந்தேதான் பிஸ்டோரியஸ் கொலை செய்தார் என்று வாதிட்டு வருகிறார்.

இந்த நிலையில் அவரை மனநல சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x